தென்காசி, மே 23- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு: தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில் நீர் வற்றியதை அடுத்து குளத்தில் இருக்கும் மதகுக்கு அருகே குளத்தின் உள்ளே ஒரு தூம்பு இருப்பதும் அதில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தென்பொதிகை குடும்பன், பி. கே. கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் உதவியோடு ஆய்வு செய்தனர். இதுகுறித்து நாராயணமூர்த்தி மற்றும் குழுவினர் கூறுகையில், புதிதாக தூம்பில் கண்டறியப்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கி.பி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது. பாண்டிய பேரரசர் மூன்றாம் ராஜசிம்ம பாண்டியரின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 914 இல் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தென் வார நாட்டுக் கிழவன் அமைத்துக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. மொத்தம் 18 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேளாண்மைக்காக ஏரி குளங்கள் வெட்டுவதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் வெட்டுவதும் பண்டைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பழக்கம். இதையொட்டி தாம் அமைத்துக் கொடுத்த மதகு கால் தூம்பில் எட்டிமாறன் என்பவர் கல்வெட்டி கொடுத்துள்ளார். எட்டிமாறன் அமைத்த தூம்பில் இருந்து குளக்கரை மதகு 75 அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 75 சென்டிமீட்டர் இடைவெளி உள்ள குமிழி தூண்கள் இரண்டும் ஐந்து அடி அகலம் கொண்ட மதகு காலும், கரை மதகை இணைக்கின்றன. 19x13x3.5 சென்டிமீட்டர் அளவு கொண்ட சுட்ட செங்கற்களால் தூம்பின் அடிப்பகுதியும் காலும் கட்டப்பட்டுள்ளன.
சுண்ணாம்பு காரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மதகு காலும் தூம்பின் அடிப்பகுதியும் மிகுந்த பலத்துடன் எத்தகைய வெள்ளத்தையும் பேரழிவையும் எதிர்கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல வெள்ளங்களையும், இயற்கை மழை பேரிடர்களையும் சந்தித்த இத்த தூம்பும் காலும் சிதையாமல் இருப்பதில் இருந்தே தமிழர்களின் கட்டுமான அறிவியலை உணர முடிகிறது. தூம்பை அமைத்த இந்த எட்டிமாறன் பற்றிய பிற செய்திகளை நாம் அறிய முடியவில்லை. எனினும் இவர் ராஜசிம்ம பாண்டியரின் தாத்தாவான சீமாறன், சீவல்லபன் ஆட்சி காலத்தில் பெரும் புகழோடு வாழ்ந்த அரசு அதிகாரியான எட்டிசாத்தன் என்பவரின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. எட்டி சாத்தன் தென்பாண்டி நாட்டில் கிழவன் ஏரி என்ற பெயரில் பல ஏரிகளையும் குளங்களையும் அமைத்தவர் என்பது பல கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. அதே போன்று இந்த கீழப்புலியூர் குளத்துக்கு தூம்பும். காலும் அமைத்தவர் எட்டி மாறன் என்ற தென் வார நாட்டுக் கிழவன் என்று கல்வெட்டு கூறுவதால் இவர்கள் வழி வழியாக தென்பாண்டி நாட்டில் வேளாண்மைக்காக குளங்கள் ஏரிகள் வெட்டியும் மதகு தூம்புகள் அமைத்து கொடுத்தும் வாழ்ந்தார்கள் என்று கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் குழுவினர் தெரிவித்தனர். -இலமு