கொல்கத்தா, ஆக.31- மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் அன்சோல் பகுதியில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, செப்டம்பர் 2-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.