திண்டுக்கல், ஜுலை 8- சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புதுவகை நோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி உயிருக்குப் போராடும் இளம் பெண் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிகிச்சைக்கான உதவி கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊரில் அன்னக்கொடி என்னும் அரசு போக்குவரத்து தொழிலாளி வசித்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி .இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும் ஜமுனா என்ற மகளும் உள்ளனர் . ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 2014 ஆம் ஆண்டில் ஜமுனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது .இதனால் அவரது இதயத் துடிப்பு குறைவானது. இதன் காரணமாக அவ்வப்போது ஜமுனா மூர்ச்சையாகி விழுந்து விடுவார். பதறிப்போன பெற்றோர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்துப் பார்த்தபோது. ஜமுனாவுக்கு சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகையான நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
25 லட்சம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய ஆபத்தான நோய் இது. சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்பது தன்னுடல் தாக்க கோளாறு ஆகும். உடலில் உள்ள இணைப்பு திசுக்களில் வித்தியாசமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இணைப்பு திசு, உடல் உறுப்புகள், தசைகளுக்கு வலிமையையும் வடிவத்தையும் கொடுக்கிறது. கோலஜன் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தோளின் அமைப்பு மாறுபடுகிறது. வீக்கம், வலி ஏற்படுகிறது. இந்த நோய் தாக்குதல் காரணமாக இதயம், ரத்தக்குழாய், செரிமான அமைப்பு, நுரையீரல், சிறுநீரகம் பாதிக்கப்படலாம். நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. குறுகிய தமனிகளால் இதயம் ரத்தத்தை போதுமான அளவிற்கு பம்ப் செய்ய முடிவதில்லை. இதனால் நுரையீரல், இதயத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்து, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூளைக்கு ஆக்ஜிசன் இல்லாததால் சோர்வு, மயக்கம் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்குதலால் ஜமுனா கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.
பத்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். உயிருக்கே ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்ற இடத்தில் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர் நிறுத்திவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக தினமும் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார் ஜமுனா. வாழ்நாள் முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டரோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை விலைக்கு வாங்கி தன் மகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்தனர். மகளின் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்கிறார்கள்.ஆனாலும் அவர்கள் முகத்தில் கவலை எப்போதும் குடி கொண்டிருக்கிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்ட இயந்திரம் பழுதடைந்துள்ளன. தற்போது ரெட்கிராஸ் சொசைட்டி மூலமாக இயந்திரம் கொடுத்துள்ளனர். தந்தை அன்னக்கொடிக்கு பேருந்தில் பணியாற்றும் போதெல்லாம் மகளின் கவலை தான்.
பல நேரங்களில் கழிப்பறை சென்ற போது ஜமுனா மூர்ச்சையாகி கிடந்து விடுவார். உடனே கதவைத் தட்டி ஜமுனாவின் தாய் ஓடிவந்து அவரது வாயில் வாய் வைத்து ஊதிய பிறகு அவரை தூக்கி வந்து ஆக்சிஜன் இயந்திரம் அருகே அமர்த்தி ட்யூப்புகளைப் பொருத்திய பிறகு தான் ஜமுனா எழுந்து அமர்வார். இந்த உயிருக்கான போராட்டம் தினசரி நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஓ 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தைக்கு இதே போல் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதை காண்பித்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தனது மகளின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட அந்த பெற்றோர், தமிழக முதல்வர் மகளின் சிகிச்சைக்காக ஏதாவது உதவி செய்யமாட்டாரா ? என்ற வேண்டுகோளை கண்ணீருடன் நம்மிடம் முன்வைத்தனர். மக்கள் மீது அக்கறை கொண்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , உயிருக்குப்போராடும் இளம்பெண் ஜமுனாவின் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(ந.நி)