கடலில் நீந்தும் பொழுது களைப்பு உண்டாகிறது. ஓரிடத்தில் உல்லாசப் பயணம் செய்யும் பொழுது உற்சாகம் பிறக்கிறது. ஆற்றில் குளித்த பின் உடம்பிற்கொரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இவைகளை எல்லாம் அபாயம் இன்றி அனுபவிக்க நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் ஓடம் கவிழும் பொழுது ஓடத்தோடு அதில் பயணம் செய்தவர்களும் நீருக்குள் அமிழ வேண்டியதுதான். நகர வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது நாட்டுப்புற வாழ்க்கையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதனுக்கும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த நவீன யுகத்தில் கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஓட்டத் தெரிந்தவர்களை எண்ணில் அடக்க முடியாது. ஆனால் இவற்றைப் போல வாழ்க்கைக்கு அவசியமான நீச்சலை அறிந்து கொண்டவர்கள் அதிக அளவில் இல்லை என்பதுதான் நாம் அறியும் உண்மை. ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு நடப்பதற்கு முன்னரே நீந்தக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் உலகிலேயே கடல் சூழ்ந்த நாடுகளான ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும் தான் நீர் விபத்துக்கள் அதிகம். நம் நாட்டில் கிராமங்களைக் காட்டிலும் கடற்கரையை ஒட்டிய நகரங்களிலே தான் இவ்விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. ஆனால் நிலத்தில் நடக்கும் விபத்துக்களைக் காட்டிலும், நீர் விபத்துக்கள் குறைவுதான். நீர் விபத்துக்கள் பொதுவாகத் தனியாக நீந்தும் பொழுதுதான் அதிகம் ஏற்படுகின்றன. பலரும் சேர்ந்து குளம், குட்டைகளில் குளிக்கும் அபயக்குரலும், அவர் நீரில் கை, கால்களை உதறும் சத்தமும், பக்கத்தில் உள்ளோரின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. நம்மைப் போன்ற ஓர் உயிர், நீரில் தத்தளிக்கிறதே என்று நினைத்து அவர்கள் மூழ்குபவரைக் காப்பாற்றிவிடுகின்றனர்.
குழந்தை கருப்பையில் நீர் சூழ்ந்த அல்லது நிறைந்த பனிக்குடத்தின் உள்ளே தான் வளர்கிறது. அப்படி இருந்தும் மனிதனுக்கு நீரில் மிதந்து செல்லவோ, அல்லது நீர் வாழ் பிராணிகளைப் போலச் சிரமமின்றி நீந்தவோ தெரியாது என்பதுதான் உண்மை. கை, கால்களை ஆட்டித் தசைகளுக்கு வேலை கொடுத்த பின்னரே நீந்த முடிகிறது. இது ஏன்? மனித உடலின் எடையில் முக்கால் பகுதி நீர் உள்ளது. மீதி கால் பங்கு கொழுப்பும் காற்றும், இவைகள் தான் உடல் மிதக்கக் கொஞ்சம் உதவி புரிகின்றன. இந்தக் காற்றையும் கொழுப்பையும் உடல் நீரிலிருந்து எலும்பின் எடை சரி செய்து விடுகிறது. ஆகவேதான் உடல், நீரில் எப்பொழுதும் அமிழும் தன்மையுடையதாகவே, உள்ளது. ஆண்களைவிடப் பெண்களும் குழந்தைகளும் அதிகம் மிதக்கும் தன்மையுடையவர்கள். ஏனெனில் அவர்கட்கு உடலில் கொழுப்பு நீரில் மூழ்குபவரின் மிதக்கும் தன்மை மிதப்பவரின் எடையையும், உடையையும், அமிழும் வேகத்தையும், உடல் அமைப்பையும் நீரின் உப்புத் தன்மையையும் நீரின் வீத எடைமானத்தையும் பொறுத்தது. நீரில் மூழ்கி மரணமடைபவர் மூன்று முறை நீரின் மேல் வருவார் என்பது நம்மிடையே இருக்கும் பொதுவான நம்பிக்கை, இது உண்மை இல்லை. உடல் நீரில் அமிழும் பொழுது நெஞ்சிலுள்ள காற்றினாலும், கை, கால்களை ஆட்டுவதாலும் உடல் தண்ணீருக்கு, மேல் வருகிறது. பிறகு தலை எலும்பின் கனத்தினால் உடல் நீருக்குள் அமிழ்கிறது. இதைத்தான் நீரில் மூழ்குபவர் நீரில் மூழ்கும் பொழுது மரணத்திற்கு முன் மூன்றுமுறை தண்ணீருக்கு மேல் வருவார் என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் மூச்சை இழுத்த பின்னும், விரிந்த மார்புடையவர்களும் நீரில் மூழ்கும் போது நீரின் மட்டத்திற்கு மேல் சீக்கிரம் வருவார்கள். ஆனால் பயத்தினால் அலறிச் சத்தமிட்டபின் மீண்டும் நீருக்குள் மூழ்கி விடுவர். நீரில் மூழ்குபவர் தன் நெஞ்சிலுள்ள காற்றை வெளியேற்றுவதாலும் தண்ணீரைக் குடிப்பதாலும் அவரது உடல் மிதக்கும் தன்மையை இழந்து விடுகிறது. எனவே அவர் நீருக்குள் மூழ்க நேருகிறது. இயற்கையில் மனிதன் மிதக்கும் தன்மை படைத்தவன் அல்ல. தனது சுயமுயற்சியினால் கால்களை அசைத்தே அவன் நீந்த வேண்டியவனாக உள்ளான்.
நீர் விபத்தின் பொழுது நீர் மூக்கிலும் வாயிலும் புகுந்து நுரையீரலையும் இரைப்பையையும் அடைகிறது. நுரையீரலுக்கு செல்லும் பொழுது இருமல் உண்டாவதால் காற்று நெஞ்சை விட்டு வெளியேறுகிறது. அதிக நீர் நுரையீரலுக்குள் செல்லுபொழுது சளி, நீர், காற்று மூன்றும் சேர்ந்து நுரைத்து மூக்கிலுள்ள வாயிலும் அடைத்துக் கொள்கின்றன. ஆகவே நன்றாக சுவாசிக்க முடிவதில்லை. இந்த மாறுதல் உடலில் நடைபெறும் பொழுதுதான் உடல் நீரின் மேலேயும் கீழேயும் வந்து போய் தத்தளிக்கிறது. நுரையீரலும், இரைப்பையும் நீரால் முழுவதும் நிரம்பிய பின்னர் உடல் மேலே வரமுடியாது போய் மரணம் ஏற்படுகிறது. இந்நேரத்தில் சிலருக்கு வலிப்பு உண்டாவதால் மரணம் அதிவிரைவில் ஏற்படுகிறது. நீர் விபத்தின் பொழுது உயிர் போவதற்கான காரணங்கள் யாவை? பிராணவாயு இரத்தத்தில் குறைந்து, கரியமிலவாயு அதிகமாவதால் மூளையில் சுவாசக் கட்டுப்பாட்டு நிலை சீரழிந்து, மூச்சு வெளிவரும் அளவு கழுத்திலும் இரைகள் தடித்து விடுகின்றன. இந்நிலை 5 நிமிடத்திற்கு மேல் நீடித்தால், மயக்கம் உண்டாகி மரணம் நிச்சயம் நிகழ்கிறது. சில வேளை நீர் விபத்தின் பொழுது நீர் தொண்டையை அடைத்தவுடன் பேச்சுக்குழாய் திடீரென்று சுருங்கிவிடும். ஆகவே காற்று நுரையீரலுக்குள் செல்லாது, உயிர் போய் விடுகிறது. மற்றும் சில நேரங்களில் அதிகம் குளிர்ந்த நீரில் குளிக்கும் பொழுது இருதய இயக்கத்தில் பழுது ஏற்பட்டு மரணம் விளைகின்றது. சுத்தமான நீரில் நீர் விபத்து ஏற்பட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகமாகிச் சிவப்பு அணுக்கள் உடையும். இந்த உடைந்த சிவப்பு அணுக்களிலிருந்து வெளியே வரும் பொட்டாசியம் என்னும் உப்பு இருதயத் துடைப்பை அதிகமாக்கி இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடும். அப்பொழுது மூளைக்குத் தேவையான அளவு இரத்தம் போகாது. ஆகவே மரணம் உண்டாகும். ஆனால் கடல் நீரில் இவ்விபத்து ஏற்படும் பொழுது உடலில் உள்ள இரத்த அடர்த்தி அதிகமாகிப் பின் குறைந்து கொண்டே போவதால் மரணம் உண்டாகிறது.
நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவரை நாம் எப்படிக் காப்பாற்றுவது?
நீரில் விபத்துக்குள்ளானவர், அலறியபடி மூழ்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவரிடம் நெருங்கி நீந்திச் சென்று தூக்கக் கூடாது. ஏனெனில் தான் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று கருதி, உதவி செய்ய நெருங்குபவரை இறுகக் கட்டிக் கொள்வார். ஆகவே இருவரும் சேர்ந்து மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலை வராமல் தடுக்க மூழ்குபவர் தத்தளித்து ஓய்ந்தபிறகு அவரது முடியைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் ஓட்டத்திலேயே இழுத்து வர வேண்டும். முடிந்தால் கரையிலிருந்தபடியே வேட்டி அல்லது துண்டின் ஒரு முனையைத் தவிப்பவரிடம் விட்டெறிந்து பிடித்து இழுத்து உதவ வேண்டும். அப்படிக் காப்பாற்றப்பட்டவர் கரைக்குக் கொண்டு வரப்பட்டதும் அவருக்கு நாம் செய்ய வேண்டிய முதலுதவி யாது? விபத்துக்குள்ளானவரின் ஆடைகளைத் தளர்த்தி விட வேண்டும். நாக்கை வெளியே இழுத்துச் சுவாசம் தடையின்றி நடைபெற வழி செய்ய வேண்டும். நெஞ்சு, வயிறு முதலிய பகுதிகளிலிருந்து குடித்த நீரை அமுக்கி வெளியேற்ற வேண்டும். செயற்கைச் சுவாசம் வாயின் மூலம் கொடுக்க வேண்டும். செயற்கைச் சுவாசம் 10 முறை கொடுத்தும் நாடித்துடிப்பு வரவில்லையென்றால், நெஞ்சுக் குழிக்கு இடது புறத்தில் அமுக்கி இருதயத் துடிப்பை உண்டாக்க வேண்டும்.
மூச்சும் இருதயத் துடிப்பும் வந்தவுடன் உடலைக் கம்பளியால் மூடி சூடான நீர் அல்லது பால் குடிக்கச் செய்ய வேண்டும். நிமோனியாச்சுரம் இவர்களுக்கு வர வாய்ப்புண்டு. அதற்காக முன்கூட்டியே ஆண்டிபயோடிக் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். மேலும் இவர்களை மருத்துவமனையில் சேர்த்து மூத்திரக்காய் பழுது இருப்பின் சரி செய்ய வேண்டும். இந்நீரில் விபத்துக்களைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் ஒவ்வொருவரும் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் நீந்தக் கற்றுக்கொள்ள இயக்கங்கள் நடத்த வேண்டும். ஆறு, குளங்களில் பயமற்ற படித்துறைகள் கட்ட வேண்டும். குளிக்கும் முன் பூட்ஸ் போன்ற காலணிகளையும் பளுவான ஆடைகளையும், கழற்றி விட வேண்டும். நீச்சல் குளங்களிலும், உல்லாச ஏரிகளிலும், காப்பாற்றும் படை தயாராக இருக்க வேண்டும். வலிப்பு வருகின்றவர்கள் நீந்தக் கூடாது. தனியாகவும் குடி போதையிலும், இரவிலும் நீந்தக்கூடாது. மறுகரைக்கு ஆற்றைக் கடக்கவோ, நீரின் நடுவில் உள்ள படகை நோக்கியோ நீந்தக்கூடாது. ஏனெனில் அவைகள் பார்க்க அருகில் உள்ளவை போல் தோன்றும் ஆனால், உண்மையில் வெகு தொலையில் இருக்கும். அதிக நேரம் குளிர் நீரில் நீந்தக்கூடாது. ஏனெனில் சீக்கிரம் உடல் தொய்வு ஏற்படும். தெரியாத இடங்களில் நீந்தும் பொழுது கரையில் உளள் அடையாளங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீரில் ஓட்டத்தில் நீந்துபவர் அடித்துச் செல்லப்படும்பொழுது அதிக தூரம் சென்றதை உணர முடியும். மேலே கூறப்பட்டுள்ள தற்காப்பு முறைகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் நீந்தத் தெரிந்து கொண்டால் நீர் விபத்து க்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது எளிதாக இருக்கும் என்பது திண்ணம்.
தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1