what-they-told

img

நிறைமாத கர்ப்பிணி கொரோனாவிற்கு பலி

மும்பை, ஏப்.10- மும்பை புறநகர் பகுதியான நாலா சோபாராவைச் சேர்ந்தவர் 27 வயது நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு ஏப்ரல் 8 பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி இரவு மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது கணவர், கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு, ஆட்டோவில் 70 கி.மீ பயணம் செய்து, மூன்று மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். யாரும் சிகிச்சையளிக்க முன்வராததால் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முதலில் தாம் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார். கொரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அங்கிருந்த மருத்துவர் அனுமதிக்க மறுத்து விட்டடார். அங்கிருந்து, அரசு நடத்தும் சர்வோதயா மகப்பேறு இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். தங்களிடம் சிகிச்சை அளிக்க போதுமான வசதியில்லை என அவர்கள் கூறியுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் சுதிர்பண்டாரி ஆம்புலன்ஸ் வசதிகூட செய்துதரவில்லை. இதையடுத்து ஏப்.4-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு 40 கி.மீ தூரத்திலுள்ள மும்பையிலுள்ள சதாப்தி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரலில் நீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.இதையடுத்துஅவர்கள் 30 கி.மீ தொலைவில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக கர்ப்பிணி உயிரிழந்தார். இதுகுறித்து நாயர் மருத்துவமனை முதல்வர் ஆர்.என்.பர்மால் கூறுகையில், மருத்துவமனைக்கு வரும்போது கர்ப்பிணியின் நிலை மோசமாக இருந்தது. அவரது ரத்தமாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தியதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது என்றார்.

கடந்த 22 நாட்களில் நாலா சோப்ராவில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்த கர்ப்பிணி தான் தற்போது இறந்துள்ளார் எனக் கூறிய சர்வோதயா மகப் பேறு நிலைய மருத்துவர் சுதிர் பண்டாரி, கர்ப்பிணியின் கணவர் சரியான தகவல்களை எங்களுக்கு அளிக்கவில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த குடிசைப் பகுதியை நகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. யார் யாருடன் கர்ப்பிணி தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களை சேகரிக்க, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக வந்துள்ளதாக நினைத்துக் கொண்டு, அப்பகுதியினர் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து, கர்ப்பிணி பெண் வீட்டிற்கு அருகில் இருந்த 32 வீட்டினரை தனிமை முகாமிற்கு மாற்றுமாறு காவல்துறையை குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

கர்ப்பிணியின் உறவினர் உள்ளிட்ட 32 குடும்பத்தினர் நாலா சோப்ராஅருகிலுள்ள பள்ளியில் தனிமைப்படு த்தப்பட்டுள்ளனர். நாலா சோப்ரா குடிசைப்பகுதிகளில் உள்ள 6,453 பேரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.