உலகமயமாக்கல் கால பொருளாதாரக் கொள்கையும், அதை எதிர்த்த தொழிலாளர்இயக்கங்களின் வரலாறும் பல உண்மைகளை பேசிக் கொண்டே இருக்கின்றன. புதிய சிந்தனைக்கும்செயலுக்கும் வழிவகுக்கவும் செய்கின்றன. தீபாவளி கொண்டாட்டமும் அதை ஒட்டிய போனஸ் பட்டுவாடாவும், இந்த உண்மைகளுக்குள் அடக்கம். ஏன் போனஸ் வழங்கவேண்டும் என்பது துவங்கி, இவ்வளவு தான் தர முடியும் என்பது வரையான ஆணவமான பேச்சுக்களும் தராவிட்டால் விடமாட்டோம் என்கிற உரிமைப் போராட்டங்களும் கொண்டாட்டத்தில் ஒளிந்திருக்கும் எதார்த்தமான இயக்கவியல் விதிகள். பெரும்பான்மை இந்துக்கள் என அழைக்கப்படும் உழைப்பாளி மக்கள், இந்த ஆண்டு தீப ஒளி கொண்டாட்டத்தை இருளில் கழித்திருப்பது குறித்துபாஜகவின் இந்துத்துவா ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.
பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின் பண்டிகைக் கால கொண்டாட்டங்களுக்கு உத்வேகம் அளிப்பது, போனஸ் தொகையாகும். ஏற்கனவே கொரோனா பொது முடக்கத்தில் உறைந்து நிற்கும் உழைப்பாளி மக்களை அரசும் தனியார் நிறுவனங்களும் போனஸ்வழங்கும் தொகையை குறைத்து வஞ்சித்தது மட்டுமல்லாமல், பெரும் துயரத்திற்குள் தள்ளி இருக்கின்றன.
போனஸ் (மீதூதியம்) என்பது என்ன?
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற வர்க்க நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (Payment of Bonus Act - 1965). பிரிட்டிஷ் காலத்தில் இந்தியதொழிலாளி வர்க்கம் ஒரு கணக்கீடு செய்து, தனக்கானஉரிமையை இந்த போனஸ் தொகைக்காக வலியுறுத்தியது. அதாவது, ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. மாதம் 4 வாரம் எனக் கணக்கீடு செய்து மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் 12 மாதங்களுக்கு 48 வாரங்கள் மட்டுமே கணக்கீடு செய்யப்படுவதால், மீதம் உள்ள 4 வாரங்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கவேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு, சாதிக்கவும் செய்தது.
ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து, ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம். நடைமுறை செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம். அந்த ஆண்டில் அந்நிறுவனம் செலுத்துகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம். மேற்கண்டவை கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது குறைந்தபட்ச மீதூதியம் (8.33%) நிறுவனம்வழங்க வேண்டும் என்பது கணக்கீடு செய்யப்படும் நிறுவனங்களுக்கு பொருந்தும் விதி.
இன்று நம் நாட்டில், பன்னாட்டு, இந்நாட்டு பெரு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டும் நிலையிலும், போனஸ்தொகை தொழிலாளர்களுக்கு வழங்கும் போது நஷ்டக் கணக்கு காட்டுவது வழக்கமாக உள்ளது. உபரி தொழில்வளர்ச்சி என்ற பெயரில், புதிய முதலீடாக மாறுவதை கணக்கில் வைப்பது இல்லை. நிறுவனம் கடனில் உள்ளதுஎன்பதை எளிதாக சுட்டிக்காட்டும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது ஒரு மோசடிக் கணக்கு என்றும் சொல்லலாம். ஏற்கனவே போனஸ் சட்டம், நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், தொடர்ந்து போனஸ் உச்ச வரம்பு ரூ. 7000 என்ற அளவில் உள்ளது. குறைந்த பட்ச சம்பளம் ரூ. 11000 அல்லது ரூ.12000 என தீர்மானிக்கப்பட்ட நிலையிலும் கூட, உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது, பெரும்பான்மை மக்களான தொழிலாளர்களை வதைக்கும் கொள்கை என்பதை தவிர வேறென்ன?
50 ஆண்டுகளுக்குப் பின்னரும்...
நடப்பாண்டில் அரசும் கூட போனஸ் தொகையை குறைத்து வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் மின்சாரவாரியம், கூட்டுறவு மற்றும் பொது விநியோகத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் வழங்கல் ஊழியர்கள் என நீண்ட வரிசை கொண்ட ஊழியர்களுக்கு அரசு மரியாதை செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கான போனஸை உயர்த்தவில்லை என்றாலும், குறைக்காமலாவது இருந்திருக்கலாம். ஆனால் இந்தஆண்டு குறைத்து, அர்ப்பணிப்பு மிக்க உழைப்பையும் குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. 1965 ல் போனஸ் சட்டம்இயற்றப்பட்ட போதும், அதைத் தொடர்ந்த காலத்திலும் அரசுதீர்மானித்த போனஸ் குறைவு. 1972 ல் அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடந்துள்ளன. ஜூலை 15, 1972 துவங்கி டிசம்பர் 10வரை பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு 8.33 சத போனஸ் என்பதற்கான போராட்டத்தை நடத்திய வரலாறு உண்டு. 50 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே அளவில் தான் தொழிலாளி வர்க்கம் போனஸாக பெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் குறையும் போது, நிறுவனங்களின் லாப விகிதம் குறையும் போது அலறல் அதிகமாக இருக்கிறது. ஆனால் தொழிலாளர்களுக்கான போனஸ் விகிதம் உயராமல் இருப்பது குறித்து, நமது அரசுகள் கவலை கொள்வதில்லை. அதாவது உண்மை ஊதியம் எப்படி உயராமல், விலைவாசி உயர்வை சரிக்கட்ட மட்டுமேஊதிய உயர்வு வழங்கப்படுகிறதோ, அந்த வகையில் கூட போனஸ் கணக்கீடு செய்யப்படவில்லை. இது கொரோனாபொது முடக்கக் காலத்தில் முடங்கிக் கிடக்கும் தொழில்களைமீட்டெடுக்கவும், நாட்டின் வேலைவாய்ப்பை உயர்த்தவும் உதவாது.
சொல்லும் செயலும்
முரண்படுவது ஏன்?
நவதாராளமய கொள்கையில் இந்தியா முன்னேறி விட்டது என்றும், இன்றைய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கொண்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஓசூர் பகுதிகள் பிரமாண்ட வளர்ச்சியை எட்டும் என்றும் முழங்கிக் கொண்டிருந்தவர்கள், இப்போது பேசுவதில்லை. குறிப்பாக 89 மில்லியன் (8.9 கோடி) மக்கள் 2025 ல் உயர் நடுத்தர வர்க்கமாக மாறுவர் என ஆரூடம் கூறியவர்கள் எங்கே ஒளிந்து கொண்டனர் என்று தெரியவில்லை. மார்ச் 2020 கணக்குப்படி அதானி, அம்பானி துவங்கி இந்திய உற்பத்தித் துறையின் அடையாளம் என சொல்லப்படும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் வரை நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளன. சுமார் 15.1 சதம் வளர்ச்சி எனவும், அதில் 19.5 சதம் லாபமாக இருக்கும் எனவும், லாபத்தை கணக்கீடு செய்யும் முறையான EBITDA (Earnings Before Interest, Taxes, Depriciation and Amortization) கணக்கு தெரிவிக்கிறது. உதிரி பாக தொழில்களிலும் குறைவில்லை என்கிறது மேற்படி அறிக்கை.இந்த கொரோனா பொது முடக்க காலத்திலும், ஊடகங்கள் எழுதிய நவதாராளமய கொள்கையின் காரணமான வளர்ச்சி சொற்ப எண்ணிக்கையிலான முதலாளிகளுக்கே கிடைத்துள்ளது. அதாவது நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு என சொல்லப்படும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் உற்பத்தித் துறை 4.5 சதம்வளர்ச்சியை பெற்றுள்ளது. இது கடந்த 2019 காலத்தை விட 2.5 சதம் மட்டுமே குறைவு. அப்படியானால், 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையான காலத்திற்கான போனஸ் ஏன் குறைகிறது? தனது பங்குதாரர்களை கவர்வதற்கு ஒரு கணக்கும், தொழிலாளர்களின் பலன்களை கட்டுப்படுத்த ஒரு கணக்கும் சொல்லப்படுகிறது என்பது வெளிப்படை. போனஸ் என்பது, கடந்த நிதியாண்டு லாபத்தில் இருந்து அல்லது செயல்பாட்டில் இருந்து வழங்கப்படுவது. இருந்தாலும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களான தொழிலாளர்களை வஞ்சிக்கும் கொள்கைக்கே துணையாக நின்று செயல்பட்டு வருகின்றனர்.
பன்னாட்டு முதலாளிகள் அவர்களது நாடுகளில், பெரும்பாலும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்றமுறையில் பட்டுவாடா செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். பண்டிகைக் கால போனஸ் வழங்குவது அவர்களுக்குஆச்சர்யமாக உள்ளது. அதேநேரம் லாபம் மற்றும் அதன்தன்மைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கிடசட்ட ரீதியில் தயாராக உள்ளனர். அதன் காரணமாகவே இங்கே போனஸ் சட்டம் மற்றும் அதன் வரம்புக்கு உட்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் போனஸ் வழங்குவதில்லை. சில தொழிற்சாலைகளில் ஒப்பீட்டு அளவில் அதிகமாகவும், சில ஆலைகளில் குறைவாகவும் வழங்குகின்றனர்.தொழிற்சங்கங்கள் மீதான பாரபட்சம் காரணமாகவும், இந்த அணுகுமுறை வெளிப்படுகிறது. இந்திய சட்டத்தின் போதாமை, இத்தகைய பாரபட்சங்களை நீக்கிடும் அளவிற்கு அழுத்தம் தர முடியாமல் உள்ளது. எனவே தான்போனஸ் உச்ச வரம்பு சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மிக அவசியமான இடத்தை வந்தடைந்துள்ளது.
கொரோனா பொது முடக்க காலத்தில் தனியாருக்கு அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறை,
ரயில்வே உள்ளிட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இழப்பை சந்தித்திருந்தால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலைபேசுவது எப்படி சாத்தியமாகி இருக்கும்?. ஏற்கனவே சுரண்டல்மூலமான லாபம், அடுத்து அரசின் சலுகைகள் மூலமானலாபம், அதற்கும் மேல் பொதுத்துறை சொத்துக்களை அபகரிக்கும் புதிய முதலீடு என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வளர்ச்சி மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
நவம்பர் 26 வேலைநிறுத்தம்
மத்திய பாஜக ஆட்சி தற்போது முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தி வருகிறது. அதை அடுத்தாண்டு முதல் அமலாக்கவும் ஏற்பாடுகள் முடிந்து விட்டன. கொரோனா பொது முடக்க காலத்தை பாஜக ஆட்சியாளர்கள் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனியார் பெரு நிறுவனங்கள் பெருமளவுலாபம் ஈட்டினாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுருங்கிகீழ்நோக்கிச் செல்லும் அபாயத்தையும் பார்க்க முடிகிறது. இந்தப் பின்னணியில் தான் நேரடி பணப்பயன்கள் மிக முக்கியத் தேவையாக பேசப்படுகிறது. மேலே குறிப்பிட்டபடி, பண்டிகைக் கால போனஸ் வழக்கம் போல் அல்லதுசற்று உயர்த்தி வழங்கப்பட்டு இருந்தால், சந்தையிலும், உற்பத்தியிலும் பிரதிபலித்திருக்கும். சமூகம் முழுமைக்குமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு சமூக நீதிக்கான கோரிக்கையாக மீண்டும் போனஸ் உருவாகியுள்ளதை அரசு உணர வேண்டும்.
அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டத்தை பண்டிகைக் காலத்திற்கும் விரிவுபடுத்துவது அல்லது சிறப்பு நிதியாக வழங்குவது செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம்போல் நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் அமலாகியிருந்தால் அதன் விளைவு அனைவரும் பயன் பெறத்தக்கதாக மாறியிருக்கும்.மேற்படி கோரிக்கைகளை உழைக்காதவர்களுக்கு செய்யும் தானமாக அரசும், நிறுவனங்களும் சித்தரிக்கின்றன. உண்மையில் நேரடிப் பணப்பயன், தொடர் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முதலீடாக பார்க்கப்பட வேண்டும். இந்த பணப்பயன்களை அணுபவிக்கும் யாதொரு தொழிலாளியும் கிடைக்கும் பணத்தை பதுக்கி வைக்கப் போவதில்லை. ஆனால் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் கிடைக்கும் பணம் பதுக்கப்படுகிறது.
சமூக வளர்ச்சிக்கான இந்த புரிதல் காரணமாகவே மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் நவம்பர் 26 வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. வேலைநிறுத்தம் அரசையும், நிறுவனங்களையும் நிர்ப்பந்திக்கும் ஆயுதமாக உள்ளது. பசித்திருப்பவர் மேலும் தன்னை துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்ளும்இந்த சம்பள இழப்புடன் கூடிய வேலை நிறுத்தம் எவ்வளவுதுயரமானது என்பதை அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் உணரவேண்டும். வேலை நிறுத்தங்களின் போது நாட்டிற்குஇழப்பு என அலறும் அமைப்புகள், ஒவ்வொரு தொழிலாளிக்குமான இழப்பை உணர வேண்டும். நாடு என்பதுபெரும்பான்மை மக்களான தொழிலாளர் - விவசாயிகளை உள்ளடக்கியது என்பதை, போராடித்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
கட்டுரையாளர் : எஸ்.கண்ணன், சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர்