tamilnadu

என்ன செய்யப் போகிறோம்..? - பாரதி கண்ணம்மா

கவின்மிகு
காஷ்மீர் அன்னையின்
கட்டுக் கூந்தல் 
மழிக்கப்பட்டு
உத்ராட்ச
வேலியால் ஒப்பனை!

சங்கி அகோரிகள்
மாறி மாறி இழுத்த
கஞ்சா கனல் தெறிப்பு
“சிறப்பு அந்தஸ்து”
மாராப்பைப் பொசுக்கியது.

மேனி தவழும்
குளிரோடைக் குழவிகள்
சோமபான
சுத்திகரிப்புக் கழிவுகளால்
சுவாசமற்றுப் போயின.

செங்கோலும்
சிம்மாசனமும் 
விலங்கிடப்பட்டு
இன்றும்கூட
வீட்டுப் பரண்களில்!

தெரு விளையாடும்
சிறுவர் நெற்றிகளிலும்
தீவிரவாதிகள் என்று
தீயில் பழுக்க வைத்த
திரிசூல முத்திரை!

“தால்” ஏரியெங்கும்
சலனமில்லா
சடலப் படகுகள்!

வண்டாளத் தேன்ததும்பும்
ரோஜா செண்டுகளில்
வடிகிறது நிணநீர்!

வெண்பனி
மேனியெங்கும்
வேனிற்
கொப்புளங்களாய்
ஆதரவற்ற
ஆப்பிள் கனிகள்!

மதவெறி நாகங்கள்
மண்டை தீண்டிய நஞ்சு
பாதங்களைப்
பற்றும் வரை
என்ன செய்யப்
போகிறோம் நாம்...?

பாரதி கண்ணம்மா