"தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் திரைத்துறையில் 71-ஆவது தேசிய விருதுகள் குறித்து பட்டியலை ஒன்றிய ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு தேசிய விருதை தேசிய விருதுகள் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கேரளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம் தேசிய விருதுகள் தேர்வுக் குழு, சங் பரிவாரின் பிளவுபடுத்தும் கொள்கையில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
எப்போதும் நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் நிற்கும் மாநிலமாக உள்ள கேரளம், இதன் மூலம் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் உண்மைக்காகவும், நாம் போற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் தங்களின் குரலை எழுப்ப வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.