கொடைக்கானல்,மார்ச் 7- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வருவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலைத்தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலில் பகல் பொழுதில் வெயில் அடித்த போதும் இதமான தென்றல் காற்று மேனியை தழுவிச் செல்கின்றது. இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியல் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கோடைகாலம் தொடங்கி யுள்ளதையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க பல்வேறு மலர்ச் செடிகள் நடப்பட்டுள்ளன. இதில் பூக்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பூத்துக்குலுங்கும். மேலும், உலகத் தலைவர்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிய வற்றின் ஓவியங்களை மலர்களால் வரைந்து சுற்றுலா பயணிகளை கவர மலர் கண்காட்சியில் வைப்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.