பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் அரசை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல், இன்று வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும், குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையாகும். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், அகதி முகாம்கள் உள்ளிட்டவைகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி அழித்து வருகிறது. உணவும், மருந்தும் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் மடிந்து வருவது கண்டு, பாலஸ்தீன மக்கள் கதறி அழும் குரல் உலகின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.
அமெரிக்காவின் ஆயுத உதவி மற்றும் முழுமையான ஆதரவோடு இஸ்ரேல் அரசு இந்த இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் மீது இன அழிப்பு வெறியோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்து போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளில் 149 நாடுகள் இஸ்ரேலின் போர் வெறிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துள்ளன. பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஆரம்ப நாள் முதல் ஆதரவு தெரிவித்து வந்த இந்தியா, மோடி ஆட்சியில் வழி வழியான நிலையை மாற்றி, இனவெறி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஐ.நா சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நாட்டின் பாரம்பரியமான வெளியுறவுக் கொள்கைக்கு மோடியின் அரசு துரோகமிழைத்துள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீனம் மீதான இன அழிப்பு போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும், இஸ்ரேலின் இனவெறி போருக்கு ஒன்றிய பாஜக அரசு துணைபோவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 24) சென்னை சைதாப்பேட்டையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.