tamilnadu

img

மும்மதங்கள் சங்கமிக்கும் ‘மத நல்லிணக்க பூமி’யின் திருவிழா வேளாங்கண்ணி பெருவிழா

நாகப்பட்டினம், செப்.01- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்  வட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெரு விழா ஆக.29 அன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தஞ்சை மறை மாவட்ட ஆயர்  தேவதாஸ் அம்புரோஸ் துவக்கிவைத்தார்.  ‘கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம்’  என்று அழைக்கப்படுகிற வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை  ஆண்டு பெருவிழா திங்கட்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டின் “மதநல்லிணக்க பூமி”  என்று வர்ணிக்கப்படுகிற, நாகப்பட்டி னம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் கோவில் என மும்மதங்கள் சங்கமிக்கும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மாவட்டமாக விளங்குகிறது. தமிழர்களின் ஐவகை திணைகளில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய கடலும் கடல் சார்ந்த நிலத்தில் உருவான வேளாங்கண்ணி பேராலயம் அனைத்து தரப்பு மக்களாலும் வணங்கப்படுகிறது. அனைத்து மதத்தினரும் பக்தர்களாக வந்து வேளாங்கண்ணி மாதாவை தரிசிப்பது வழக்கம்.  வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை தரிசித்துவிட்டு, நாகூர் ஆண்டவர் தர்காவையும் வணங்கிச் செல்கின்றனர். 

ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய  அன்னை ஆண்டு பெருவிழாவில் பல லட்சம் மக்கள் கூடுகின்றனர். பாதசாரி களாகவும், தனி வாகனத்திலும், பொது போக்குவரத்திலும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக  பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடை பெற்றது. தற்போது பெருந்தொற்றின் பயம் நீங்கி மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு வந்த பின்பு இந்த விழா நடைபெற்று வருகிறது. 10 லட்சம் பேர் திரள்வார்கள் என பேராலய பங்கு தந்தைகள் தெரிவிக்கின்றனர். மோர்கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது, போர்ச்சுகீசிய மாலுமிகளை புயலிலிருந்து காப்பாற்றியது ஆகியன மாதாவின் மகிமைகளாக நம்பப்படுகிறது. இப்பேராலயம் தமிழகத்தின் கத்தோ லிக்க கிறிஸ்தவர்களின் முக்கிய ஆலய மாக திகழ்கிறது. திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் திருத்தேர் பவனி நடை பெறுகிறது. இத்திருத்தேர் பவனியில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து  தேர் சுமந்து வருவது மத நல்லிண க்கத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர் சேர்க்கப்பட்டு, ஒன்பதாவது நாள் இரவு ஒன்பது தேருடன் சிறப்பு தேர்பவனி நடைபெறும். தேர் பவனி திருவிழாவின் உச்சமாக கருதப்படும், இந்நாளில் வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் கூடுவார்கள். அடுத்த நாள் கொடி இறக்கப்பட்டு திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.  இப்பேராலயத்தில் தமிழ் மொழி மட்டுமல்லாது, இந்தியாவின் முக்கிய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, கொங்கணி உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலிகள் நடைபெறும். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் பிரதான ஆராதனைகள் நடைபெறும்.  பக்தர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலா  பயணிகளுக்கும் சிறந்த பொழுது போக்கு இடமாக வேளாங்கண்ணி திகழ்கிறது. பேராலயத்தின் எதிரே  உள்ள வங்கக் கடலில் பக்தர்களாக வும், பயணிகளாகவும் வருபவர்கள் நீராடு வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் அவர்களுக்கான உணவு, தங்குமிடம், சுகாதார வசதி உள்ளிட்டவை பேராலயத்தின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், வேளாங்கண்ணி பேரூராட்சியின் சார்பிலும் சிறப்பாக செய்து தரப்படுகிறது. காவல்துறை மூலம் 24 மணி நேரமும்  பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கண்கா ணிப்பு கேமராக்கள் மூலமும், கண்கா ணிப்பு கோபுரம் மூலமும், பேரூராட்சி யின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்பா ட்டிற்குள் கொண்டு வந்து காவல்துறை யின் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம், தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவதற்கும், அவர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்புவதற்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவில் நடைபெறும் நிகழ்வுகளை, தொடர் நிகழ்வுகளாக இணையதளத்திலும், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவும், அச்சு ஊடகத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.  தொடக்க நாளான கொடியேற்ற நாளன்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், நாகை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், பேராலய அதிபர், துணை அதிபர் மற்றும் பங்கு தந்தைகள் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். 

- ஆதி.உதயகுமார்