கொச்சி, மார்ச் 2- அடுத்த மக்களவைத் தேர்தலில், பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக பாடுபடும் என, கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக இடதுசாரி எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார். கொச்சியில் துவங்கியுள்ள கட்சியின் கேரள மாநில மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் தெரிவித்ததாவது: 2004-இல் பாஜக தலைமையிலான வாஜ்பாய் அரசை அகற்றுவதில் இடதுசாரிகள் முக்கியப் பங்காற்றினர். நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் மொத்தமுள்ள 20 இடங்களில் 18 இடங்களை இடதுசாரிகள் கைப்பற்றினர். அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக சமீபத்திய தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்று கூறிய காங்கிரஸால் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக ஆக முடியவில்லை. கேரளாவில் மொத்தமுள்ள 20 இடங்களில் 19 இடங்களில் யுடிஎப் வெற்றி பெற்றது. இதை உணர்ந்து கேரள மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த மாநாட்டுக்குப் பிறகு நான்காண்டுகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் கட்சி பெரும் வளர்ச்சியை எட்ட முடிந்தது. கடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு, சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரசை தோற்கடிப்பது. அந்த முடிவை அமல்படுத்த முடிந்தது. இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வளர்ச்சி பெற வேண்டும் என்கிற திருச்சூர் மாநாட்டின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். யுடிஎப்பில் இருந்த கேரள காங்கிரஸ் (எம்) மற்றும் எல்ஜேடி ஆகியவை இடதுஜனநாயக முன்னணிக்கு வந்தன. ஆனால், இடதுசாரிகளின் அடித்தளத்தை அழிக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. கேரளாவில் பெரிய அளவில் வகுப்புவாத அணிதிரட்டலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வகுப்புவாத அமைப்புகள் மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இடதுசாரிகள் வலுவாக இருப்பதால் வகுப்புவாத அமைப்புகளின் திட்டங்கள் தோல்வியடைகின்றன. சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 3000 மையங்களில் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்தனர். இது கலவரத்திற்கான தயாரிப்பு, அவர்களின் திட்டத்தை புரிந்து கொண்டு மதச்சார்பற்ற அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கொடியேறி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 63,000 உயர்ந்துள்ளதாகவும் கொடியேரி கூறினார். தற்போது 5,27,378 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 2012 ஆம் ஆண்டு முதல் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சிக்குள் புதியவர்கள் வருவதையே இது காட்டுகிறது. 25 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கொடியேரி தெரிவித்தார். பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது; 1495 கிளைகளில் பெண் செயலாளர்கள் உள்ளனர். கேரளாவில் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் அதிகளவில் இணைகின்றனர். கட்சித் தோழர்கள் நேர்மறை சிந்தனையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கட்சியின் வெகுஜன செல்வாக்கு அதிகரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையை கொண்ட கட்சியாக மாற்ற வேண்டும். கிளை மட்டத்திலிருந்து அனைத்து மட்டங்களிலும் அரசியல் விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் கட்சியின் தீர்மானத்தின்படி இதுவரை 1040 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை சில இடங்களில் நடைபெறவில்லை. ஓராண்டுக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என்றும் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார்.