தமிழ் மொழி வளர்ச்சிக்கு சொற்ப நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசை கண்டித்து தமுஎகச தீர்மானம்'
சிதம்பரம், ஆக. 18- தமிழ் மொழி வளர்ச்சிக்கு சொற்ப நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமுஎகச 16 ஆவது கடலூர் மாவட்ட மாநாடு. சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் சி.வெங்கடேசன் நினைவு அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜானகி.ராஜா தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் ஆர். ராகவேந்திரன் வரவேற்றார். கே.என் பன்னீர்செல்வம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மொழி வணக்க பாடலை ஆசிரியை செ. லட்சுமிபிரியா பாடினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் உமா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாநில துணைத் தலைவர் மூசா, சிதம்பர நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால்கி செயலாளர் மற்றும் வரவு செலவு அறிகையை சமர்ப்பித்தார். தமுஎகச மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்டத் தலைவராக பாரதிதமிழ் முல்லை, செயலாளராக ஜானகிராஜா, பொருளாளராக பால்கி உள்ளிட்ட 27 மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ‘கீழடி நம் தாய்மடி’என்ற தலைப்பில் பொது கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் பாரதி தமிழ் முல்லை வரவேற்றார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பால்கி தலைமை தாங்கினார். அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. பழனி வாழ்த்துரை வழங்கினார். கீழடி தமிழரின் தொன்மை என்ற தலைப்பில் எழுத்தாளர் சொர்ண பாரதி, கீழடி சமய சார்பின்மை தலைப்பில் முனைவர் அருணாச்சலம், கீழடி மானுட மேன்மை என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக தமுஎகச மாநிலத் துணை பொதுச்செயலாளர் களப்பிரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வரவேற்பு குழு சிதம்பரநாதன் நன்றி கூறினார். மாநாட்டில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, ராதாகிருஷ்ணா, ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டுரை, கவிதை போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீரில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி வெளி யிடப்பட்ட 25 புத்தகங்கள் தடை செய்வதை யும், சமஸ்கிருத மொழிக்கு தாராள நிதி யும், தமிழ்மொழிக்கு சொற்ப நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.