tamilnadu

மீன்பிடித்தலுக்கான மானியம் நிறுத்தப்படும்

புதுதில்லி, ஜுன் 19- மீன்பிடித் துறையில் மானியத்தை நிறுத்த ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை  (ஜுன் 17) நிறைவடைந்த உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் மானியங்களை படிப்படியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க, கண்காணிப்பை அதிகரிக்க நாடுகள் முடிவு செய்துள்ளன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீன்பிடி மானிய ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஒன்பது ஆண்டுகளில் இந்த அமைப்பின் இரண்டாவது பன்முக ஒப்பந்தம் இதுவாகும். ‘ஜெனீவா பேக்கேஜ்’ விவகாரத்தில் நாட்டின் நலன் காக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மானிய நிறுத்த ஒப்பந்தத்தின்படி, சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களுக்கும், வரம்பு மீறி மீன்பிடிப்பவர்களுக்கும் மானியம் ரத்து செய்யப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மீன்பிடிக்க மட்டுமே இனி மானியம் பொருந்தும். சமையல் எரிவாயு மானியத்தைப் போலவே, மீன்பிடி மானியமும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, பின்னர் நிறுத்தப்படலாம். இந்தியா தற்போது மானியத்தை முழுமையாக நிறுத்தப் போவதில்லை என்றாலும், இரண்டு ஆண்டுகளில்  மானியம் வழங்குவதை முடிவுக்கு கொண்டுவரலாம் என கருதப்படுகிறது. கோவிட் தடுப்பூசிகளுக்கான காப்புரிமைக்கு ஐந்தாண்டு விலக்கு அளிக்கவும் ஜெனீவா உச்சிமாநாடு முடிவு செய்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய விளைபொருட்களின் ஆதரவு விலை  குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மின் வணிகத்திற்கான சுங்க விலக்கு 2024 வரை தொடரும்.