tamilnadu

img

ஆய்வக நுட்ப கவுன்சிலை நடைமுறைப்படுத்த கோரிக்கை

சென்னை, மே 6- 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு புறாதாரமுறையில் அறிவிக்கப்பட்ட 187  ஆய்வக நுட்பனர் பதவிகளை தேர்வாணையம் மூலம் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளியன்று (மே 6) பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவத் துறையிலே 1.4.2003-க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றக் கூடிய ஆய்வக நுட்பனர்களை வருங்கால வைப்பு நிதியில் இணைக்க வேண்டும்.  அரசாணை 1577இல் பணி நியமனம் பெற்ற ஆய்வக நுட்பனர்களை பணியேற்ற நாளிலிருந்து பணிவரன் முறை செய்ய வேண்டும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலே புறாதார முறையில் அறிவிக்கப்பட்ட ஆய்வக நுட்ப பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் அறிவிக்க வேண்டும்.

ஒன்றிய அரசிலுள்ள ஆய்வக நுட்பனர்களைப் போல் ஆய்வக வல்லுநர், தொழில்நுட்ப மேற்பார் வையாளர், தொழில்நுட்ப அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.  மருத்துவத்துறையிலே புறாதார பணியிடங்கள் இருக்காது, காலமுறை  ஊதியத்தில் அனைத்து பணியிடங்க ளும் நிரப்பப்படும் என்று அறிவித்ததை நிறைவேற்ற உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதற்கிடையே கூடுதல் செயலாளர் செல்வகுமாரை சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, செல்வகுமார், செல்வ ராணி, ஆ.கோபிநாதன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் அரசின் பரிசீலனை யில் உள்ள ஒரு சில கோரிக்கைகள் அரசாணையாக வெளியிட நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும், பிற கோரிக்கை கள் குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடர்  நிறைவடைந்த பின் அமைச்சர் மற்றும்  முதன்மைச் செயலாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் மா.செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலா ளர் வீ.பார்த்தசாரதி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கோ.பன்னீர் செல்வம், கோ.சுகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளர் இரா.ந.நம்பி ராஜன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.விஜயகுமரன், எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அஸ்வினி,  செல்வராணி ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.  மாநில செயலாளர்கள் தே.புரு ஷோத்தமன், வே.முருகானந்தம், த.ஏழுமலை உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.