மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையம் இந்திய அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான ஆணையங்களில் ஒன்றாகும். இந்த ஆணையத்திடம் 1983ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் அளித்த அறிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. கண்ணூரில் தற்போது நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23வது மாநாட்டின் ஒரு பகுதியாக ஏப்ரல் 9 அன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கினையொட்டி, மாநில உரிமைகளுக்காக சர்க்காரியா ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இ.எம்.எஸ்-சும் முன் வைத்த கருத்துக்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. வேறுபட்ட கட்சிகளின் ஆட்சி நடைபெற்ற போதிலும் மத்திய - மாநில உறவுகள் எப்போதுமே எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கைகளின் சாராம்சம் வாதிடுகிறது. - ஆசிரியர்
- ஆசிரியர்
1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதி. நமது நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு அமல்செய்யப்பட்ட போது நிலவிய சூழ்நிலையையும், அந்த அரசியல் சட்டம் எப்படி செயலாற்றி வருகிறது என்பதனையும் பற்றிய சில கருத்துக்களை தருகிறோம். இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக பரிசீலிக்காமல், அரசியல் - வரலாற்று ரீதியாகவே அணுக விரும்புகிறோம். காரணம் நமது அரசியல் சட்டம் உலகின் இதர நாடுகளின் அரசியல் சட்டங்கள் போல சட்டங்களைத் தொகுத்திருந்த போதிலும் சமூக - அரசியல் உறவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. எனவே, அந்த அரசியல் சட்டத்தின் செயல்பாடு பற்றிய பரிசீலனை, சமூக - அரசியல் சக்திகளின் செயல்களைப் பற்றிய ஆய்வுடன் துவங்க வேண்டும்.
மையப்படுத்தப்பட்ட நிர்வாகம்
இந்த நாட்டை 150 ஆண்டுகாலம் ஆண்டுவந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நாட்டின் நிர்வாகம் முழுவதையுமே மையப்படுத்தி இருந்தனர். நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும், தில்லியில் மையமாக வைக்கப்பட்டு, அதுவும் லண்டனிலிருந்து இயக்கப்பட்டு வந்தது. நமது நாட்டின் நீண்ட வரலாற்றில் முன்பு எப்போதும் இத்தகைய மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இருந்ததில்லை. இப்படிப்பட்டதொரு வளமை வாய்ந்த மைய நிர்வாகத்தை எதிர்நோக்கிய விடுதலை இயக்கம், நாட்டின் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டியிருந்தது. சாதி, மதம், மொழி வேறுபாடுகளை யெல்லாம் கடந்த ஜனநாயக, சமத்துவ, சகோதரத்துவ, அடிப்படையிலான ஒற்றுமையை உருவாக்க வேண்டியிருந்தது. இந்த முயற்சி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்ததால், பிரிட்டிஷார் இந்த ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பிரித்தாளும் கொள்கை
அந்த முயற்சியின் துவக்கமாக அமைந்தது தான் பிரித்தாளும் கொள்கை. நாட்டில் இந்துக்களல்லாத சிறுபான்மையினர், நலிவடைந்த பின்தங்கிய மக்கள், பணபலம் மிகுந்த வர்த்தகர்கள், நிலபிரபுக்கள், பழைய மன்னர்கள் அனைவரையும் அரசியல் சுதந்திரம் கோரிவந்த காங்கிரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது பிரிட்டிஷ் அரசு. அதனைத் தொடர்ந்து படிப்படியாக உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்களும் ஐரோப்பிய தோட்ட முதலாளிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சுயநல சக்தி களுக்கு விலக்கு அளிப்பதை வலியுறுத்தின. இந்த சக்திகளை, விடுதலை இயக்கத்தின் ஒற்றுமைக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்து-முஸ்லீம் பிரச்சனையை எப்போதும் தங்கள் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்தனர். இந்திய மக்கள் ஒற்றுமைக்கு இந்த சீர்குலைவு முயற்சி விளைவிக்கவல்ல ஆபத்தை விடுதலை இயக்கத் தலைவர்கள் புரிந்து கொண்ட போதிலும், சமுதாயத்தின் உயர்மட்டத்திலிருந்து வந்த அந்த தலைவர்களால் முழுவதும் ஜனநாயக, மதச்சார்பற்ற திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோரை திரட்ட இயலவில்லை. எனவே விடுதலை இயக்கத்தின் முடிவு, அந்நிய ஆட்சியா ளர்களுக்கும் அவர்களது இந்தியக் கூட்டாளிகளுக்கு மிடையேயான சமரச ஏற்பாடாகவே அமைந்தது. விடுதலை இயக்கத்திற்கு வித்திட்ட தலைவர்களும் மக்களும் கட்டிக்காக்க விரும்பிய அந்த ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகியது. எந்த ஒன்றுபட்ட இந்தியாவின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ, லட்சக் கணக்கான மக்கள் கடும் இன்னல்களை ஏற்றார்களோ, அந்த நாடு இரண்டு துண்டாக வெட்டப்பட்டது. இந்த துண்டு போடும் கசாப்பு வேலை, முன்பு என்றும் கண்டிராத படுகொலைக்கும் காரணமாகி, இந்து - முஸ்லீம், சீக்கியர்களிடையேயான உறவுகளை யும் கடுமையாகப் பாதித்தது.
கவர்னர்களின் அதிகாரம்
ரசியல் சட்டத்தில் பிரிட்டிஷார் 1935இல் இயற்றிய அரசியல் சட்டத்தில் ராஜ்யங்களின் (மாநிலங்களின்) கவர்னர்களுக்கு வழங்கிய விசேஷ அதிகாரங்கள் பலவற்றை அப்படியே பாதுகாத்தது. கவர்னர் பதவியும் அவரது அதிகாரங்களும், அதிகாரத்தை மேற்கொண்ட புதிய ஆட்சியாளர்களுக்கு மிகவும் சாதக மாகப் பயன்பட்டன. அவற்றை எதிர்க்கட்சிகளுக்கெதி ராகவும் அதற்குப்பிறகு ஆளும் கட்சியிலேயே இருந்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்த அவை சாதகமாக அமைந்தன. இந்த நடை முறைதான், சமஷ்டி அரசு (கூட்டாட்சி அரசு) அமைப்பினுள்ளே அமைந்த மாநில சுயாட்சி என்ற தத்துவத்திற்கு பெருத்த அடியாக அமைந்தது. இந்த சமஷ்டி ஆட்சியிலான மாநில சுயாட்சி என்ற கருத்து தான் விடுதலைப் போராட்டத்தில் உருவான ஒற்றுமையை கட்டிக்காக்க முடியும். ஏனெனில் (அ) விடுதலை இயக்கம் வளர்ந்துவரும் நிலையில் பல்வேறு மொழி, சாதி, தேசிய இனங்கள் தங்களது தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் தேசிய அமைப்பினுள்ளே தங்களுக்கென தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் துவங்கின (ஆ) முஸ்லீம் தலை மையோ, மையத்திலும் பெரும்பாலான மாநிலங்களி லும் இந்துக்களின் பெரும்பான்மைக்கு ஈடாக - முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களுக்கு சுயாட்சியைக் கோரியது. (இ) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களு க்கெதிரான ஒன்றுபட்ட இயக்கத்தில், முஸ்லீம் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக தேசியத் தலைமையிலிருந்த முஸ்லீம் அல்லாதவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்பது நல்லது என்று கருதினார்கள். வருங்காலத்தில் உருவாக்கப் பட வேண்டிய அரசியல் சட்டத்தில் மாநிலங்களுக்கு விரி வான அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி ஆட்சி என்ற கருத்து இணைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம், 1916ல் காங்கிரஸ் லீக் ஒப்பந்தத்திலும் 1928ல் மோதிலால் நேரு அறிக்கையிலும், 1940 வரையிலான அனைத்து விவாதங்களிலும் விளக்கப்பட்டது.
வாக்குறுதிகள் பறந்தன
ஆனால் 1947இல் ஒரு புதிய பெரிய திருப்பம் உரு வானது. நாடு இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட ஒரு பகுதியாக இந்தியா என்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஒரு பகுதியாக பாகிஸ்தான் என்றும் பிரிக்கப்பட்டது. விடுதலை இயக்கத்திற்கு தலைமை வகித்து ஆட்சியாளர்களாக மாறிய முதலாளி வர்க்கம் சமஷ்டி அடிப்படையில்லாத மையப்படுத்தப் பட்ட ஆட்சி ஒன்றே, தங்களது வியாபாரத்திற்காக உள்நாட்டுச் சந்தை உருவாக சாதகமானது என்று அக்கறை கொண்டது. எனவே, சமஷ்டி ஆட்சி, மாநில சுயாட்சி, மொழிவாரி மாநில அமைப்பு ஆகியவற்றில் தனது அனைத்து வாக்குறுதிகளையும் மீறியது. கொள்கை அடிப்படையில் சமஷ்டி ஆட்சி என்று 1950 - ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட அரசியல் சட்டம் கூறிய போதிலும் அதன் உள்ளடக்கம் முழுவதும் மையப்படுத்துவதையே அதிகமாக்கியது. மூன்று தலை முறைக்கு அதே அரசியல் கட்சி மையத்திலும் மாநி லங்களில் பெரும்பாலானவற்றிலும் ஆட்சி பீடத்தில் இருந்தது இதற்குச் சாதகமாக அமைந்தது.
முதலில் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை கள் அனைத்தையும் மாநிலங்கள் ‘தாங்களாகவே’ திரும்ப ஒப்படைக்குமாறு செய்யப்பட்டன. துவக்கம் முதலே அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங் களில் பல மாநிலங்களுக்கு இருந்த சிறிதளவு சுயாட்சி உரிமைகளையும் பறித்துக் கொண்டன. அதனால் தான், மாநில மட்டத்தில் இதர அரசியல் கட்சிகள் மாநிலங்களின் நிர்வாகத்தை ஏற்கத் துவங்கியதும், மத்திய, மாநில உறவுகள் பிரச்சனை பெரிய விவாதத்திற்குரிய விஷயமாகி விட்டது. காங்கிரசல்லாத மாநில அரசுகள், அதிக நிதி ஆதாரங்களுக்காகவும் அதிகாரங்களுக்காகவும் போராடத் துவங்கிய போது, காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்திய மாநில அரசுகளும் இந்த கோரிக்கையில் சேர்ந்து கொண்டன. இந்த அதிகாரப் பறிப்பு வேலை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது என்பதை இத்தனை ஆண்டுகாலம், ஒன்றிய அரசு நியமித்த நிதிக் கமிஷன்களிலும் மாநில அரசுகள் தொடர்ந்து முன் வைத்த கோரிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. மாநில அரசுகளின் வருவாய் அதிகாரங்களில் ஒன்றிய அரசு கை வைப்பதை ஆட்சேபிப்பதில் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் அரசுகளுக்கும் இதர கட்சிகள் ஆட்சி புரியும் அரசுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன.
முழுவதுமாக மறுபரிசீலனை செய்க!
மத்திய - மாநில உறவுகள் பிரச்சனை முழுவதுமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அரசியல் சட்டம் வடிவமைக்கப்படும் போதே, சமஷ்டி ஆட்சிக் கொள்கையும், மாநில சுயாட்சித் தத்துவமும் பெரு மளவில் மீறப்பட்டுள்ளன. அரசியல் சட்டம் வடிவமைக் கப்பட்ட விதத்தில் தவறுகள் இல்லை; அதனை செயல்படுத்திய முறையில் தான் தவறுகள் ஏற்பட்டன என்று கூறுவதை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்த அரசியல் சட்டமும் அமலாக்கப்படும் பொழுது திரிக்கப்படுகிறது என்றும் அரசியல் சட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறிதளவான சுய அதிகாரங்களும் அரிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறுகிறோம். எனவே, அரசியல் சட்டத்தின் அடிப்படை விதிகளை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறோம். அதனை எப்படி செய்வது என்பதை விளக்கும் முன்பு, மத்திய - மாநில உறவுகள் பற்றிய எங்களது பொதுவான நிலையை விளக்குகிறோம்.
நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கவும், பிரி வினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் எங்களது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி கொண்டிருக் கிறது. நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளவும், பொருளாதார வாழ்வை சீரமைத்துக் கொள்ளவும், அயல்துறைக் கொள்கை, செய்திப் போக்குவரத்து, வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றை செயல்படுத்த போதுமான அதிகாரங்களுடன் கூடிய வலிமை வாய்ந்த திறமையான மைய அரசு தேவை என்பது எங்களது கொள்கையாகும். கெடுவாய்ப்பாக, நாட்டின் ஒற்றுமைபால் மக்களுக்குள்ள வேட்கை மற்றும், அந்நிய படையெடுப்புகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் ஆகியவற்றை ஆளுங்கட்சி வேறுவிதமாகப் பயன்படுத்தி, மைய அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி மாநி லங்களின் அதிகாரங்களை பறித்துக் கொள்வதற்கு சாதகமாக்கிக் கொண்டது. வலிமை மிகுந்த மைய அரசு என்பது, ஆளும் கட்சியின் கண்ணோட்டத்தின்படி தன்னிச்சையாக செயல்படும் சர்வாதிகாரம் மிகுந்த அரசு என்பதே ஆகும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்தின் 42ஆவது திருத்தம் மாநிலங்கள் அனைத்தையும் மைய அரசின் அடியாட்கள் என்ற நிலைக்கு தள்ளியது. அது எதேச்சதிகார ஆட்சிக்கு இன்றியமையாத தேவை என்பதை நிரூபித்தது.
எனவே மத்திய - மாநில உறவுகள் பற்றிய பிரச்ச னை நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பது மட்டுமல்ல, எதேச்சதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையேயான போராட்டப் பிரச்சனையாகிவிட்டது. இது ஏதோ, திடீரென ஏற்பட்டதல்ல. நாடு விடுதலை பெற்ற பின்னர் வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்டம் முதலாளித்துவப் பாதையின் தேவைகளையே வெளிப்படுத்தியது. அதற்கு தேவையாக இருந்தது ஒரு ஒன்றுபட்ட, உள்ளூர்ச் சந்தையே. ஜனநாயகம், மாநில சுயாட்சி, மொழிவாரி சமத்துவம் ஆகியவற்றிற் கான கோரிக்கைகளை, தங்களது பொருளாதார மேலா திக்கத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் தடைக்கற் களாக கருதிய பெரு முதலாளிகள் மற்றும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்த நிலப்பிரபுக்களின் தேவைகளை அது பிரதிபலித்தது. எங்களது கட்சித்திட்டம் சொல்லுகிறது:
“இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஒன்றிய அரசாங்கத்து க்கும் மாநில அரசுகளுக்குமிடையே முரண்பாடுகள் வளர்வது இயற்கையானதே. இந்த முரண்பாடுகளுக்குப் பின்னால் ஒரு புறத்தில் பெரு முதலாளிகளுக்கும், மறு புறத்தில் இந்த அல்லது அந்த மாநிலத்தின் முதலாளி கள் உள்பட சகல பகுதி மக்களுக்குமிடையேயுள்ள மிக ஆழமான முரண்பாடு இருந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் சீரற்ற தன்மை தீவிரமாவதன் காரண மாக மேற்குறிப்பிட்ட ஆழமான முரண்பாடு இடை விடாமல் தீவிரமாகிக் கொண்டேயிருக்கிறது.’’
(கட்சித்திட்டம் - 32வது பக்கம் பாரா - 60)
சுயநல சக்திகளுக்கு சாதகமான மைய அரசின் கொள்கைகள், பொருளாதார நெருக்கடி, மக்களை பரம ஏழைகளாக்கியது ஆகியவை மாநிலங்களின் உரிமை களின் மீதும் மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை விளைவித்தன.
திட்டங்கள் பற்றி...
இந்த நடைமுறையுடன், மைய அரசிடம் பொரு ளாதாரத் துறையில் அண்டி நிற்கும் நிலைமைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுவதும் தொடர்ந்தது. மாநிலங்கள் எவ்வளவு பொதுக்கடன் வாங்குவது என்பதை நிச்ச யிப்பது மைய அரசு வங்கிகள் மற்றும் பொது நிதி நிறு வனங்களிடம் உள்ள கடன் வசதிகளை தனது ஏகபோக அதிகாரத்திற்குட்படுத்தியுள்ளது. அப்படிச் செய்ததன் மூலம் மாநிலங்களை மைய அரசு வழங்கும் மானியத்திற்காக கையேந்தி நிற்க வைக்கிறது. மாநிலங்களுக்கான திட்டமிடும் முறையுடன் இவை அனைத்தும் சேர்ந்து, மாநி லங்களின் திட்டமிடுதலையே ஒரு கேலிக்கூத்தாக்கி யது மட்டுல்ல, அவை அனைத்தும் மைய அரசின் திட்டங்களின் தொங்குசதையாக நிற்கின்றன. அதாவது மைய அரசின் திட்டங்களின் சிந்தனையோட்டத்தைக் கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகளின் வசதிக்கேற்பவும் தேவைகளுக்கு ஏற்பவும் குறைக்கப்படவும், விரி வாக்கப்படவும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பின் தங்கிய நிலைமையும், சமச்சீரற்ற நிலைமை நிலைத்து நிற்பதும் உருவாகின்றன.
அதிகாரக் குவிப்பு
இத்தனை ஆண்டுகளாக, இப்படிப்பட்ட அரசியல் பொருளாதார அதிகாரக் குவிப்பு, அரசியல் சட்டத்தில் உள்ளடங்கியிருந்த ஓரளவு சமஷ்டிக் கருத்துக்களையும் அரித்துக் கொண்டு வந்துள்ளது. அவசரகால நிலை பிரகடனமும், அரசியல் சட்டத் திருத்தங்களும், மாநிலங்களின் அனுமதி யின்றி மாநிலங்களுக்குள்ளே மத்திய ரிசர்வ் போலீஸ்படையை அனுப்ப வகை செய்தன. அது மட்டுமல்ல, இப்படி மாநிலங்களுக்குள்ளே செல்லும் மத்திய போலீஸ்படை, மைய அரசின் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்படும். இது, மைய அரசிடம் அதீத மான அதிகாரக் குவிப்புக்கான முறையை விரைவாக வகுத்துத் தந்தன.
ஆட்சிக் கவிழ்ப்பு
நாட்டின் எந்தப் பகுதியிலும் தோன்றும் பிரச்சனை களில் தலையிடவும், அதனைச் சமாளிக்கவும் போதிய அதிகாரங்களை அரசியல் சட்டத்தின் மூலம் மைய அரசு பெற்றுள்ளது. மேலும் அதிகமான அதிகாரங்களை, மையத்திலும் பல மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி மூலம் மைய அரசு தன்வசம் குவித்துக் கொண்டது. இந்த அதி காரங்கள் அனைத்துமே, மாநிலங்களில் தேர்தல் மூலம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசு களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டன. ஆளுநரின் அதிகாரங்களை துஷ்பிரயோகப்படுத்தி ஆளும் கட்சியின் சிறுபான்மை அரசுகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டன; மாநில மக்களின் தீர்ப்பைச் செல்லாதவையாக்கின.
முற்போக்குத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை
இவற்றைப் போலவே, மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி உரிய அங்கீகாரம் அளிக்க மறுத்ததன் மூலம், மக்களின் நலனைக் கருதி நிறைவேற்றப்பட்ட முற்போக்கு திட்டங்களை தகர்ப்பதில் மைய அரசு வெற்றி கண்டது. உதாரணமாக 1957-59இல் கேரள அரசு நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்தத்துக்கு மைய அரசு முட்டுக்கட்டைபோட்டது. மேற்குவங்க இடது முன்னணி அரசினால் நிறைவேற்றப்பட்ட விவசாய சீர்திருத்த சட்டத்திற்கு பல மாதங்கள் ஆன போதிலும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. தொழிற்சங்கங்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் தருவதற்கு வகை செய்தது. முந்தைய இடதுமுன்னணி அரசு நிறைவேற்றிய சட்டமும் இப்படி ஒப்புதல் தரப்படாமல் படுகொலை செய்யப் பட்டது. ஆந்திர மாநிலத்தின் மேலவையை ஒழிக்கும் மசோதாவும் இந்த தடைக்கற்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், ஜனநா யகத்தைக் கட்டிக் காக்கவும், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியுடன் இதர அடிப்படை நோக்கங்களை ஒன்றி ணைப்பதற்கு, மைய மற்றும் மாநில அரசுகளின் உண்மையான, முழு அளவிலான ஒருங்கிணைப்பு நிச்சயம் தேவை. இது இல்லாமல், இந்தியாவின் ஒருமைப் பாடு உறுதியாக இராது. ஒரு நாடு, ஒரு மக்கள் என்ற உணர்வு பலவீனமாகும். பிரிவினை சக்திகளின் தாக்கு தல்களைச் சந்திக்க, ஒற்றுமைக்கான வலிமையான மனஉறுதி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வ தில் மாநில சுயாட்சி’ பெரிதும் துணை செய்யும். தங்களை தேர்ந்தெடுத்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய மக்களது ஆணைகளையும் அபிலாஷைகளை யும் நிறைவேற்ற போதுமான சுதந்திரமும், அதிகாரங்களும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். மைய அரசு பெற்றுள்ள ஆணை மாத்திரமே செல்லத் தக்கது என்று கூறுவது போல், மாநிலங்களில் முறை யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கும் சட்ட மன்றங்களுக்கும் இந்தச் சுதந்திரத்தை மறுப்பது இந்த சமஷ்டி அமைப்பில் அங்கம் வகிக்கும் இணைப்பு அமைப்புக்களை (அதாவது மாநிலங்களை) வெறும் அடிமைகளாக்குகிறது. இதுவே இந்திய ஜனநாய கத்தின் ஒரு கரத்தை வெட்டிவிடுகிறது என்றும்கூறலாம்.
அடிப்படை மாற்றம் தேவை
இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதன் மூலம் இந்திய நாட்டின் மக்களது பிரச்சனைகள் அனைத்தை யுமே தீர்த்துவிட முடியுமென்று எங்களது கட்சி கருதவில்லை. காரணம், அவர்களது பிரச்சனைக்கான தீர்வு, சமுதாயத்தின் அடிப்படையை மாற்றுவதன் மூலமே சாத்தியமாகும். இன்று மைய அரசில் ஆட்சி செலுத்தும் கட்சி பல மாநிலங்களில் நிர்வாகத்தில் இல்லை. எனவே மாநிலங்கள் மற்றும் மைய அரசு ஆகியவற்றின் அதிகாரங்களை திரும்பப் பரிசீலித்து மறுபடி பங்கிடுவது என்ற பிரச்சனை அவசியம் மட்டுமல்ல, அவசர மும்கூட! ஏனெனில் அப்படிச் செய்வதன் மூலமே மைய அரசு பெற்றுள்ள மக்கள் ஆணையுடன், மாநில மட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பெற்றுள்ள மக்கள் ஆணையும் உரிய முக்கியத்துவம் பெற வகைசெய்யும்.
“சாதாரண நிலைமைகளில் மாநிலங்களுக்கு சட்ட மியற்றும் சுய அதிகாரங்களை வழங்கிடும் அளவிற்கு மைய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே அதிகாரங் களை பங்கிட்டுள்ள நடைமுறையில் அடிப்படையாக எந்தத் தவறும் இல்லை’’ என்று சர்க்காரியா கமிஷன் தனது கேள்வித்தாளில் கூறியுள்ளது. இந்தக் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த முன்னுரை விளக்குகிறது. மாறாக, 1950ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் வரையப்பட்ட சட்டமன்ற அதிகாரப் பங்கீடுகள், 1935இல் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மறுபதிப்பே ஆகும். விடுதலை இயக்கத்தின் ஜனநாயக உணர்வுக்கு முற்றிலும் விரோதமாக அது (1935-ஆம் ஆண்டு சட்டம்) அமைந்ததால்தான் அதன் சமஷ்டிப் பிரிவை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்தது. அந்த 1935ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்ட மாநில சுயாட்சிப்பிரிவும் குறைபாடுகள் கொண்டதாகவே இருந்தது. அதன் காரணமாகவே 7 மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, அமைச்சரவை அமைப்பதற்கு முன்னதாக, கவர்னர்கள் தங்கள் விசேஷ அதிகாரங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்ற வாக்குறுதி தர வேண்டுமென்று வற்புறுத்தியது.
ஜனாதிபதி ஒப்புதல் மறுப்பு
நமது அரசியல் சட்டத்தில் மைய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பங்கீட்டில் ‘மாநில சுயாட்சி’ என்ற கருத்து உண்மையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, மாநிலங்களுக்கே உரிய அதிகார வரம்புகளிலும், ‘’தேசிய நலனுக்காக’’ நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மாநிலங்கள் இயற்றும் முக்கிய மான சட்டங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் அதிகாரமும், அதே போல, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் பெயரால் மைய அரசு ஒப்புதல் தர மறுப்பதும் மாநிலங்களின் சட்ட மியற்றும் அதிகார உரிமையை கேலிக் கூத்தாக்கு கின்றன.
மாநில சுயாட்சியை பாதுகாக்க...
அரசியல் சட்டத்தில், மைய அரசு மற்றும் மாநிலங்கள் பட்டியலில் கூறப்படாத விஷயங்கள் பற்றி சட்ட மியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் உரிமையா க்கப்பட்டிருக்கிறது. ‘மாநில சுயாட்சி’ பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்த இரு பட்டியல்களிலும் கூறப் படாத விஷயங்களைப் பற்றி சட்டம் இயற்றும் தனிப்பட்ட அதிகாரம்’ மாநிலங்களின் சட்டமன்றத்துக்கே வழங்கப் படும் வகையில் அரசியல் சட்டத்தின் 248 - ஆவது பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி யோசனை கூறுகிறது. அதாவது அரசியல் சட்டத்தில் கூறப்படாத எஞ்சிய அதிகாரங்கள்’ மாநிலங் களுக்குரியதாக்கப்பட வேண்டும். தற்போது உள்ளது போல் மைய அரசிடம் அல்ல. மாநிலங்களும் மைய அரசின் அதிகார விளிம்பில் ஊடுருவாத வகையில் தங்களது அதிகாரங்களை செயல்படுத்த வேண்டும். மைய அரசும், மாநில அரசுகளின் நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகார வரம்பிற்குள் தலையிடக் கூடாது. எந்தவொரு மாநிலமும், இதர மாநிலத்தின் நலனுக்கு விரோதமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. “தேசிய நலன் கருதி’’ மாநிலங்கள் விவகா ரத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை மைய அரசுக்கு வழங்கும் 249-ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும்.
மைய அரசின் பொறுப்பு
மாநிலங்களின் அதிகார வரம்பை விரிவாக்கும் அதே நேரத்தில் ஒரு மாநில அரசினால் அல்லாது மைய அரசினால் மட்டுமே நிர்வகிக்கப்படக்கூடிய விஷயங் களில் மைய அரசின் அதிகாரத்தைப் பாதுகாக்கவும், வலிமைப்படுத்தவும் முயல வேண்டும். அதாவது தேசப் பாதுகாப்பு, அயல்துறை விவகாரம், வெளிநாட்டு வியாபா ரம், நாணயம், தகவல்தொடர்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவை அவை. விலைகள் கூலி சம்பளம் ஆகியன நிர்ணயிப்பது, திட்டமிடுதல் ஆகிய வற்றில் மைய அரசு ஒருங்கிணைப்பதோடு பொது வான வழிகாட்டுதலையும் தரலாம். திட்டமிடுதல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப் பில் மட்டும் மைய அரசானது, மாநிலங்கள் மற்றும் மைய அரசின் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் வழி காட்டுதல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
திட்டக் கமிஷன்
தற்போது திட்டக் கமிஷனோ, தேசிய வளர்ச்சிக் கவுன்சிலோ அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தக் குறைபாட்டைப் போக்கிட, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் ஜனநாயக முறையில் இயங்கிடுமென்றும், திட்டக் கமிஷன் அந்த கவுன்சிலினால் நியமிக்கப்பட்டு அதற்கு பொறுப்பேற்கும் என்றும் திட்டவட்டமாக கூறும் வகையில் அரசியல் சட்டத்தில் தனியாக ஒரு விதி சேர்க்கப்பட வேண்டும். வளர்ச்சிப் பணி களுக்காக வழங்கப்படும் கடன்களும் மானியங்களும் திட்டக் கமிஷனின் தனி உரிமையாக தற்போது விளங்கு கின்றன. இந்த திட்டக்கமிஷனின் செயல்பாட்டில் மாநி லங்கள் கருத்து கூறும் அதிகாரம் இருப்பது அவசியம். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட கனரகத் தொழில்கள், மின்சாரம், எண்ணெய், நிலக்கரி, மற்றும் பாசனத் திட்டங்கள் ஆகியவை பொதுவான கொள்கைகள் உருவாகும் வகையில் மைய அரசின் பட்டியலில் இருக்க வேண்டும். தொழில்களுக்கான லைசென்ஸ் வழங்குவது போன்ற விஷயங்களில் மைய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரங் களின் பங்கீட்டில் பெரும் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். சில தொழில்களில், மாநிலங்களுக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல் திருத்தி அமைச்கப்பட வேண்டும்.
மத்திய ரிசர்வ் போலீஸ்
மாநிலங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் இதர போலீஸ் படைகளை பயன்படுத்தும் உரிமை நீக்கப்பட வேண்டும். மாநிலங்களின் சட்டம், ஒழுங்கு பிரச்சனை யும், போலீஸ் படையும் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும். தன்னால் உருவாக்கப்படும் படைகளைப் பயன்படுத்தி மைய அரசு தலையிடக் கூடாது!
ஆளுநர் செயல்பாடுகள் பற்றி...
ஆளுநர் பதவியானது, பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு அர சியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். பிரிட்டிஷார் இயற்றிய சட்டத்தில், ஆளுநர் பிரிட்டிஷ் அரசால் நிய மிக்கப்பட்டு அதற்கு பொறுப்பேற்பவரானார். நமது புதிய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ஒரே மாற்றம், ஆளுநர், மைய அரசினால் நியமிக்கப்படுகிறார் என்பது மட்டுமே. அதாவது மைய அரசில் ஆட்சி புரியும் ஆளும் கட்சியின் ஏஜண்டு என்பதே. மாநில மக்களது விருப்பத் தின் அடிப்படையிலான அரசுகளை அந்த மக்களுக்கு மறுத்து, அவர்கள் மீது விரும்பத்தகாத அரசுகளைத் திணிக்கவே இந்தப் பதவி மையத்தில் ஆட்சி புரியும் ஆளும் கட்சியினால் பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் இருந்தால் ஆளுங்கட்சியின் ‘’உயர் தலைமைக்கு இடையூறாக இருப்பார்கள்” என்று கருதப்படும் போட்டிக் கோஷ்டியின் தலைவர்களுக்கு அளிக்கப்படுவதற்காகவே, இந்தப் பதவி பயன்படுத்தப் பட்டு வருகிறது. எனவே, இந்த ஆளுநர் பாரபட்சமற்று நடந்து கொள்வார் என்று கூறுவதே கேலிக்குரியது. இந்தப்பதவி ஒழிக்கப்பட வேண்டும், அப்படி முடியா விட்டால் மாநில சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே அதற்கு நியமிக்கப்பட வேண்டும். மாநில சட்டமன்றத்தில் மாற்றம் ஏற்படும்போது ஆளுநர் நீடிக்கக் கூடாது. ஏனெனில் தற்போதுள்ள நடைமுறையில், மைய அரசுக்கே பொறுப்பேற்கும் மாநில ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கும் இடையே மோதல் உருவாகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பதவிகள்
ஆளுநர் பதவியைத்தவிர, மாநிலங்களின் நிர்வா கத்தில் மைய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடத்தக்க பல வழிமுறைகள் தற்போது உள்ளன. அவற்றில் முக்கியமானது, மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யவும், சட்டமன்றங்களைக் கலைக்கவும் மைய அரசுக்கு உள்ள அதிகாரங்களே ஆகும். இவை, பெரி தும் பாரபட்சமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மைய அரசின் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் இருந்து கொண்டு மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவிகள் ஒழிக்கப் பட வேண்டும். மாநில அரசுப்பணி, மைய அரசுப்பணி என்று அமைக்கப்பட்டு அவற்றிற்கான தேர்வு அந்தந்த அரசுகளாலேயே நடத்தப்பட வேண்டும்; மைய அரசு சேவையில் உள்ள அதிகாரிகள் மைய அரசின் ஒழுங்குக் கட்டுப்பாட்டிலும், மாநிலங்களில் பணியாற்றும் அதி காரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டி லும் தான் இருக்க வேண்டும். மாநில அரசுப்பணியில் உள்ள ஊழியர்களின் மீது மைய அரசின் அதிகார வரம்பு இருக்கக்கூடாது.
நிதி உறவுகள்
மைய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள கட்சி தலைமையில் இயங்கும் மாநில அரசுகள் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளாலும் விமர்சிக்கப்பட்ட பகுதி அரசியல் சட்டத்தில் உள்ள நிதி பிரிவினை பற்றிய பகுதியாகும். தொடர்ந்து மாநில அரசுகளால் நிதிக்கமி ஷன்களுக்கு அளித்துள்ள மகஜர்கள் மைய - மாநிலங் களின் தீவிர பங்குடன் கூடிய திட்டமிடுதல் மூலம் திட்டங்களை வடிவமைப்பதும், செயல்படுத்துவதுமே சரியான தீர்வு ஆகும். அதாவது மையப்படுத்தப்பட்ட, ஜனநாயக ரீதியான வழிகாட்டுதலின் கீழ் மாநில சுயாட்சி இருக்க வேண்டும்.
ஆட்சிமொழிப் பிரச்சனை
மைய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளில் மூன்று முக்கியமான விஷயங்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அவை ஆட்சி மொழிப் பிரச்னை, தேர்தல் முறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான விசேஷ அந்தஸ்து ஆகியவை. வளர்ந்து வரும் சமூக, பொருளாதார, அறிவு வளர்ச்சிப் பாதையில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதி யில் வாழும் மக்கள் தங்களது தேவைகளுக்கேற்றபடி தகவல் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வார்கள். பிற மொழிகளின் மீது, எந்தவொரு மொழியும் திணிக்கப்படக்கூடாது என்பது தான் இயற்கையான வழி முறையாகும். இதுவே எங்களது கட்சியின் கருத்துஆகும்.
இந்தி மொழியை இந்தி பேசாதவர் கற்பதற்கு ஊக்கம் தரவேண்டும், அதே நேரத்தில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து ஆகும். மைய அரசின் அனைத்து சட்டங்களும், அரசு ஆணைகளும், தீர்மானங்களும், அனைத்து மொழிகளிலும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய துறைகளி லும் மற்றும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் பயன் படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு அந்தந்த மாநிலத்து மக்க ளின் மொழியிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் தங்களது தாய் மொழி யிலேயே பயிற்றுவிக்கப்படும் உரிமையும், உயர்கல்வி வரை அதனை பயிற்று மொழியாக்கும் உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உருது மொழியும் அதன் எழுத்து வடிவமும் பாது காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் நேபாளி போன்ற மொழிகளையும் சேர்த்திட வேண்டும்.
தேர்தல் முறை
தற்போதுள்ள தேர்தல் முறையில் சிறுபான்மை வாக்குகளைப் பெறும் ஒரு அரசியல் கட்சி நாடாளு மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க முடிகிறது. இதன் பயங்கர நாசகர விளைவுகளை, அவசர காலநிலை பிரகடனப்படுத்தப் பட்ட போது நாம் காண முடிந்தது. அப்போது சிறுபான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் அரசு மக்களது சிவில் ஜனநாயக உரிமை களை பறித்து நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங் களையும் ஒரே ஒரு கட்சியின் ‘ரப்பர் ஸ்டாம்பு’ ஆக மாற்றியது - நாடாளுமன்றத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்துகிறோம் என்ற பெயரிலேயே இவை அனைத்தும் செய்யப்பட்டன. மாநில சுயாட்சி என்று இருந்ததும் படுகொலை செய்யப்பட்டது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திருப்பி அழைக்கும் உரிமையுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமலாக்கப்பட வேண்டியது அவசியம்.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது அளித்துள்ள விசேஷ அந்தஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும்.