தந்தை பெரியார் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருக! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்
திருச்சிராப்பள்ளி, செப். 29-
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொலைவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர புறப்பகுதிகளிலிருந்து வந்து படிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான அளவில் பேருந்துகள் ஒதுக்கப்படாததால், தினமும் கல்லூரி வருகை மற்றும் வீடு திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி நேரத்தில் அதிக நெரிசல் காணப்படுவதால், மாணவர்கள் பேருந்துகளில் வர முடியாமல், படிப்பில் பாதிப்பு அடைகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர், மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்டதற்குப் பிறகு, மேலும், சிரமம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மன்னார்புரத்திலிருந்து தினமும் நடந்து வரக்கூடிய அவல நிலை உள்ளது.
எனவே, மாணவர்களுக்கு நிரந்தரமாக போதுமான பேருந்து சேவைகள் வழங்க அரசு மற்றும் போக்குவரத்து துறை உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
