பொற்பனைக்கோட்டை 2ஆம் கட்ட அகழாய்வு நிறைவு
புதுக்கோட்டை, ஜூலை 16- புதுக்கோட்டை அருகே, தமிழகத் தொல்லியத் துறை சார்பில் நடைபெற்று வந்த பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தன. புதுக்கோட்டை அருகே வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கின. மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இந்த அகழாய்வுப் பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பு முடிந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு குழிகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. இங்கு நடைபெற்ற அகழாய்வுப் பணிகள் குறித்து, தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையின் உள்ளே 3.11 ஏக்கர் மக்கள் வாழ்விடப் பகுதி உள்ளது. இங்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 2021 இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத் தொல்லியல் கழகம் சார்பில், முதல் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த 2023 இல் நடைபெற்றது. 22 குழிகள் அமைக்கப்பட்டு, 155 நாட்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில், எலும்புமுனைக் கருவி, தங்கத் தோடு, சூதுபவள மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட 533 தொல் பொருட்கள் கிடைத்தன. செங்கல் கட்டுமானங்களும் வாய்க்கால்களைப் போன்ற நீர்வழித் தடங்களும் வெளிப்பட்டன. இந்நிலையில், 2 ஆம் கட்ட அகழாய்வு கடந்த 2024 மே மாதம் தொடங்கப்பட்டது. மொத்தம் 17 குழிகள் அமைக்கப்பட்டன. இதுவரை இரும்பு ஆணிகள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் செம்பினால் ஆன ஆணிகள், மை தீட்டும் குச்சி, தங்க அணிகலன்கள், மணிகள் செய்யும் தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளங்களாக அகேட் கல்லின் மூலப் பொருட்கள், மணிகளைத் தேய்த்து உருவாக்கும் தேய்ப்புக் கல் போன்றவையும் கிடைத்தன. எரிந்த நிலையிலான நெல்மணிகள், தாவரத்தின் வேர் போன்ற பகுதி, தமிழ்ப் பிராமி எழுத்துகள் மற்றும் கீறல் குறிகளைக் கொண்ட ஓடுகளும் கிடைக்கப் பெற்றன. 203 நாட்கள் பணி நடைபெற்ற அகழாய்வில் மொத்தம் 1982 தொல் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மாதிரிகள் சேகரிப்பு முடிந்து, குழிகளை மூடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்த ஆவணப்படுத்தும் பணி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.