இந்தியாவில் வலி நிவாரணி, ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் சுமார் 0.65 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) வெளியிட்ட அறிவிப்பின்படி, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (NLEM) உள்ள அட்டவணை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை உற்பத்தியாளர்கள் அரசு முன் அனுமதி இன்றி உயர்த்தலாம்.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த விலை குறியீட்டில் (WPI) 0.64956 சதவீதம் உயர்வு பதிவானதை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 900 வகையான வலி நிவாரணி மருந்துகள், ஆன்டிபயாட்டிக், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அடங்கும்.
மேற்கு ஆசிய மோதல்களால் மூலப்பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக உற்பத்திச்செலவு உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை மருந்துகளின் விலைகள் NPPA நிர்ணயிக்கும் உச்சவரம்பின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. மொத்த விலை குறியீட்டின் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் விலை திருத்தம் செய்ய உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
