வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
அரியலூர், அக். 23- அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலெட்சுமி ஆய்வு செய்தார். செந்துறை அடுத்த முல்லையூர் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி, தளவாய் ஆணைவாரி ஓடையின் குறுக்கே ரூ.2.63 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணி மற்றும் ஈச்சங்காடு, அயன்தத்தனூர், ஆர்.எஸ். மாத்தூர், அசாவீரன்குடிக்காடு ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்ட அவர், பின்னர், ஆட்சியர் அலுவலககக் கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடான கூட்டத்தில் கலந்து கொண்டு, காணொலி வாயிலாக வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மழை அளவு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வு மற்றும் கூட்டங்களில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
                                    