tamilnadu

img

திருட்டு நாடும் திருட்டு ராஜாவும் - உதயசங்கர்

திருட்டு நாட்டின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. எப்போது ஆந்தைக்கண்ணன் ராஜாவாக முடி சூட்டிக் கொண்டானோ அப்போதிருந்து அந்த நாடு திருட்டு நாடாகி விட்டது.  சரி ஆந்தைக்கண்ணன் எப்படி முடி சூடினான்? அவன் முடி சூடியதே ஒரு பெரிய கதை. அந்த நாட்டில் திருட்டு அதிகமாகி விட்டது. திருட்டென் றென்றால் திருட்டு உங்க வீட்டுத்திருட்டு எங்க வீட்டுத் திருட்டில்லை. மந்திரிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர் கள், போலீஸ்காரர்கள், முதலாளிகள், என்று எல்லாரும் திருட ஆரம்பித்தார்கள். மக்கள் எல்லாரும் மன்னரிடம் சென்று, “எல்லாரும் திருடினா எப்படி வாழ்வது ராஜாவே.. எப்படியாவது திருட்டை ஒழிக்க வேண்டும் ராஜாவே..” என்று முறையிட்டார்கள். உடனே திருட்டு ராஜா மக்களிடம்,

“திருடனா பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அதனால் முடிஞ்சா நீங்களும் திருடுங்க..” என்று ஆலோசனை சொன்னான்.  உடனே திருட்டுத்துறையை வளர்க்க திருட்டுத்துறை மந்திரி நியமிக்கப்பட்டார். யார் திருடினாலும் திருட்டில் ராஜாவுக்கும் மந்திரிகளுக்கும் காவல் துறைக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டான். காவல்துறையிலிருந்த காவ லர்கள் எங்களுக்குப் பங்கு வேண்டாம். நாங்களே திருடிக் கொள்கிறோம் என்று போய் விட்டார்கள். திருட்டு ராஜா நாடு முழுவதும் எப்படித் திருடுவது என்று சொல்லிக்கொடுக்க கல்லூரிகளைத் திறந்தார். திருட்டுக்கல்லூரிகளில் படித்து பரீட்சையில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களை உள்ளூரில் திருடுவதற்கும், சுமாராக மதிப்பெண் எடுத்தவர்கள் அருகிலுள்ள நாடுகளில் திருடுவதற்கும், குறைந்த மதிப்பெண் எடுத்த வர்கள் தூரத்திலுள்ள நாடுகளில் திருடுவதற்கும் அனுப்பப் பட்டார்கள். பெயிலானவர்கள் திரும்பவும் படிக்க டியூஷன் சென்டரும் நடத்தினார் ராஜா. கை தேர்ந்த திருடர்களை எல்லாம் திருட்டு ராஜா அரண்மனையில் வைத்துக் கொண்டான். சாதாத்திருடர்களை நாட்டுக்குள் திருட அனுமதித்தான். 

ஆளிருக்க மலைமுழுங்கித் திருடனுக்கு மட்டும் திருட்டு ராஜா என்று பட்டப்பெயரும் சூட்டப்பட்டது. ஆனால் அந்தப் பட்டம் எப்போதும் அந்த ராஜாவுக்கே கிடைத்தது. அப்படிக் கிடைக்கும்படி அவரே ஏற்பாடு செய்து கொண்டார். எல்லாப்பெரிய திருடர்களும் அரண்மனையிலிருந்தே புறப்படுவார்கள். மற்ற திருடர்கள் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பார்கள். அந்த நாடே திருடுவதில் கை தேர்ந்து திருட்டு நாடாகி விட்டது. திருட்டு நாட்டின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாமல் அண்டைநாடுகளும் தூரத்து நாடுகளும் அந்த நாட்டின் மீது படையெடுத்தார்கள். திருட்டு நாட்டைச் சுற்றி முற்றுகையிட்டு கூடாரங்கள்  அமைத்திருந்தார்கள். இரவோடு இரவாக அவர்களுடைய கூடாரங்களிலிருந்த  ஆயுதங்களையெல்லாம் திருட்டு நாட்டு திருட்டுப்படைத் திருடிக்கொண்டு போய் விட்டார்கள். காலையில் பார்த்தால் ஒரு சிறு கத்தி கூட இல்லை. படைகள் திரும்பிச் சென்று விட்டன. 

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் “யார் சிறந்த திருடன்?” போட்டியில் ஆந்தைக்கண்ணன் கலந்து கொண்டு திருட்டு ராஜாவின் கிரீடத்தையே திருடிக்கொண்டு போய் விட்டான். அப்படி பலே திருடனானதால் மக்கள் அவனையே திருட்டு நாட்டின் ராஜாவாக முடி சூட்டினார்கள்.  ஆந்தைக்கண்ணன் பட்டம் சூட்டும்வரை மற்ற நாடுகளைப் போலவே தான் அந்த நாடும் இரவில் தூங்கி பகலில் நடமாடும் நாடாக இருந்தது. ஆந்தைக்கண்ண னுக்குப் பகலில் கண் தெரியாது. இரவில் மட்டும் தான்  கண்பார்வை துல்லியமாகத் தெரியும். உடனே ஆந்தைக் கண்ணன் என்ன செய்தான் தெரியுமா? திருட்டு நாட்டில் பகலில் யாரும் முழித்திருக்கக் கூடாது. பகலில் நடமாடக் கூடாது. பகலில் எந்த வேலையும் செய்யக்கூடாது,  சூரியன் உதித்தவுடன் எல்லாரும் தங்களுடைய வீட்டுக்குள் போய் படுத்து விடவேண்டும். இரவானால் தான் வெளியே வரலாம் என்று உத்தரவு போட்டான். 

இது என்னடா கொடுமையா இருக்கு? என்று மக்கள்  கோபப்பட்டார்கள். ஆனால் என்ன செய்வது? ராஜாவின்  உத்தரவாயிற்றே! மக்கள் பகல் முழுவதும் தூங்கிப்பார்த் தார்கள். தூக்கமே வரவில்லை. ராத்திரி நல்ல தூக்கம் வந்தது. ஆனால் எந்த வீட்டிலும் ராத்திரி யாரும் தூங்கக் கூடாது என்று எல்லோருடைய வீட்டிலும் கண்காணிப்பு கேமராவைப் பொருத்திவிட்டான் திருட்டு ராஜா. அதையும் மீறி ரகசிய அறையில் யாராவது தூங்கினார்களென்றால் மக்களை விட்டு எங்கும் எப்போதும் பிரியாமல் இருக்கும் கூகுளும், யூ டியூப்பும் அவர்களைக் கண்காணித்து திருட்டு ராஜாவுக்குச் சொல்லிவிடும். அவ்வளவு தான் திருட்டு ராஜா அவர்களுக்கு கொடூரமான தண்டனைகளைக் கொடுப்பார். அதற்குப் பயந்து மக்கள் தூக்கக்கலக்கத்தில் கடைகளுக்குப் போனார்கள். அரிசிக்கடைக்குப் பதில் புண்ணாக்குக் கடைக்குப் போனார்கள். கடையிலும் சக்கரையைக் கேட்டால் மிளகாய்தூளைக் கொடுத்தார்கள். தங்களுடைய தெருவுக்குப் பதில் பக்கத்துத் தெருவுக்குப் போனார்கள். ஒரு சிலர் பக்கத்து ஊர்களுக்கே போய் விட்டார்கள். 

ராத்திரி தான் சமைத்துச் சாப்பிட்டார்கள். ராத்திரி தான் வேலைக்குப் போனார்கள். ராத்திரி தான் விவசாயம் செய்தார்கள். குழந்தைகள் ராத்திரி தான் பள்ளிக்கூடம் போனார்கள். ஆசிரியர்கள் தூங்கிக் கொண்டே பாடம் நடத்தினார்கள். குழந்தைகள் தூங்கிக் கொண்டே பாடம் படித்தார்கள். எல்லாம் ராத்திரி தான் நடந்தது. எப்போது சூரியன் உதிக்கிறதோ அப்போது யார் எங்கிருந்தாலும் அங்கேயே தூங்கி விடவேண்டும். அதனால் சூரியன் உதிப்பதற்குள் எல்லோரும் வீட்டுக்குப் போய் விடவேண்டும் என்று அவசரப்படு வார்கள். அப்படியும் சிலர் தெருவில் தூங்கு வார்கள். சிலர் சாலையில்  தூங்குவார்கள். சிலர் டாய்லெட்டில் தூங்குவார்கள்.   அப்படி ஒரு நாள் பகலில் தூக்கம் வராமல் வீட்டுக்குள் புரண்டு கொண்டிருந்த அறம் என்ற இளைஞன் இந்த திருட்டு ராஜாவை எப்படியாவது ஒழிக்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே இருந்த இளைஞர்கள் சேர்ந்து  ராத்திரியில் ரகசியமாக விடுதலை மலையில் இருந்த அறிவுக்குகையில் சந்தித்துத் திட்ட மிட்டார்கள். அப்போது அவர்கள் கூகுளும் யூ டியூப்பும் இருக்கிற செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டுப் போனார்கள்.

திருட்டு நாட்டில் பகலில் ஒரு சுடுகுஞ்சியின் நடமாட்டம் கூட இருக்காது. திருட்டு ராஜா ஆந்தைக்கண்ணனும் தூங்கி விடுவான். எல்லாத் திருடர்களும் தூங்கி விடுவார்களில்லையா? அவர்களுடைய திட்டத்தை ஒருநாள் நிறைவேற்றி னார்கள்.

வழக்கம்போல ராத்திரி முழித்து வெளியே வந்த ராஜாவுக்கு முன்னால் சிறைக்கம்பி இருந்தது. மந்திரி களுக்கு முன்னால் சிறைக்கம்பி இருந்தது. அரண்மனைத் திருடர்களுக்கு முன்னால் சிறைக்கம்பி இருந்தது. எல்லாரை யும் கொஞ்சகாலம் சிறையில் அடைத்து வைத்தார்கள். அவர்களுக்கும் மக்களுக்கும் உழைப்பின் பெருமையைச் சொல்லிக் கொடுத்தார்கள். எப்போதும் போல மக்கள் பகலிழ் உழைத்து இரவில் தூங்கி எழுந்தார்கள். அந்த நாட்டின் பெயரை சூரிய நாடு என்று அழைக்கிறார்கள். இப்போது யாராவது அந்த நாட்டுக்குப் போய் திருட்டு என்றால் அது என்ன என்று கேட்கிறார்கள்.