திருவண்ணாமலை, ஜூன் 9- திருவண்ணாமலை ஆவின் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகளை கண்டித்தும் முறைகேடுகளில் ஈடுபட்டுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுகக் கோரியும் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆவேச போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை அருகே, கட்டி முடிக்கப்பட்டுள்ள பீமனந்தல் பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் ஆவின் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தி யாளர்கள் வலியுறுத்தினர். இது குறித்து துணைப்பதிவாளரிடம் (பால்வளம்) கேட்டபோது கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல் பள்ளிப்பட்டு, மஷார், கொளத்தூர், குண்ணுமுறிஞ்சி, பீமானந்தல் ஆகிய 5 இடங்களில் பிஎம்சி எனப்படும் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மேல் பள்ளிப்பட்டு குளிரூட்டும் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற நான்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையங்கள், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப் பட்டுள்ளதாக புகார்கள் வந்ததது. இதையடுத்து வருவாய் துறையினர் நடத்திய ஆய்வில் மக்கள் அளித்த புகார் உண்மை என்று தெரிய வந்தது. இதன் காரணமாக, அந்த நான்கு பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்படாமல் உள்ளது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில், பால் குளிரூட்டும் நிலையங்கள் கட்டப் பட்டது எப்படி? என்பதை ஆவின் நிர்வாகம் தான் பதிலளிக்க கூறவேண்டும் என்றார்.
மாறாத காட்சிகள் !
பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறாமல் உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியின்போது அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் என்று தெரிந்தும் நான்கு கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையத்தை அமைத்துவிட்டனர். ஆனாலும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதே பகுதி யில் அரசு அலுவலங்கள், பள்ளி, வணிக நிறுவனங்கள் இப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்க பால் குளிரூட்டும் நிலையங்கள் மட்டும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது ஏன்? என்று வினவினர். திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றி யத்தில் கட்டுமான பணிகளில் முறைகேடு, தேவையற்ற வீண் செலவினங்கள், பால்குளிரூட்டும் இயந்திர தளவாடங்கள், கருவிகள் சேதாரம், பால் கொள்முதல், விநி யோகம், விற்பனையில், தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து முறைகேடு என கோடிக்கணக்கான ரூபாய் ஊழல், முறைகேடு நடைபெற்றுள்ளது கூட்டுறவு சங்க விதிமுறைகளை மீறி, இடைத்தரகர் களை ஏற்படுத்தியதால் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறிய பால் உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பால்வள துணை பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.