கொச்சி, மார்ச் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு வெள்ளியன்று (மார்ச் 4) நிறைவடைந்தது. இடது ஜனநாயக முன்னணி ஆட்சி தொடரும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, பெரும்பான்மை மக்களின் இயக்கமாக மாறும் நோக்கில், பி.ராகவன் நகரில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் முன்வைத்த செயல்பாட்டு அறிக்கை மீது எட்டு மணி நேரம் நடந்த பொது விவாதத்தில், 41 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செயலாளரின் பதிலுரைக்குப் பிறகு வியாழனன்று ஒருமனதாக அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது. 1956 க்குப் பிறகு முதல் முறையாக, மாநாட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கேரளாவின் வளர்ச்சி குறித்து முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த வளர்ச்சிக் கொள்கை ஐந்து மணி நேரம் விவாதிக்கப்பட்டது. வெள்ளியன்று இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு இ.பாலநந்தன் நகரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத், எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். கொரோனா காரணமாக பேரணி தவிர்க்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு கொச்சியை கேரளாவின் அரசியல் மையமாக இம்மாநாடு மாற்றியது.