7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா(26). கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா என்பவரை கைது செய்தனர். அதனைதொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைதொடர்ந்து குற்றவாளி ராஜாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிபடுத்த காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அவர்கள் அமர்வு, சாமிவேல் என்கிற ராஜாவுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.