tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கலைஞர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், ஜுன் 7-  தஞ்சாவூர் பழைய பேருந்துநிலையம் அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த அடிக்கல்லை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  எடுத்து வைத்தனர்.  பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன்  தெரிவி்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு  ஜுன் 15 ஆம் தேதி வருகை தந்து, கருணாநிதி சிலையைத் திறந்து  வைக்கவுள்ளார். இதற்காக அடிக்கல் நாட்டுடன், கருணாநிதி சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், தமிழக முதல்வர் தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து விட்டு, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். மறுநாள் 16 ஆம் தேதி காலை திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை.  சந்திரசேகரனின் தம்பி மகள் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, பின்னர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார் என்றார்.  இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினர் ச. முர சொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), என். அசோக் குமார் (பேராவூரணி), மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லையில் குவிந்த  ஆந்திரா நாவல் பழங்கள்

திருநெல்வேலி, ஜூன் 17- அதிக மருத்துவ குணங்கள் கொண்டதும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகவும் கருதப்படும் நாவல் பழங்களின் சீசன் நெல்லையில் தொடங்கியுள்ளது.  ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நாவல் பழ சீசனாக கருதப்படுகிறது. தற்போது ஆந்திரா வில் இருந்து லாரிகள் மூலம் நாவல் பழங்கள் நெல்லைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. வண்ணார்பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, சமாதான புரம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நாவல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ நாவல் பழம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஆந்திர மாநிலம்  பங்கனப்பள்ளி பகுதியில் இருந்து நாவல் பழங்களை மொத்தமாக வாங்கி நெல்லையில் விற்பனை செய்து வருகிறோம். அதில் சிறியது, பெரியது என ரகங்களைப் பிரித்து, அவற்றின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.280 முதல் விற்பனை செய்கிறோம். சில்லறை விற்பனையில் சற்று  விலை அதிகமாக இருக்கும். தற்போது சீசன் தொடங்கி யுள்ளதால், சில இடங்களில் ரூ.300 வரையும் விற்கப்படு கிறது. இன்னும் மூன்று மாதங்கள் சீசன் உள்ளதால், வரும்  நாட்களில் விலை சற்றுக் குறைய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு: குமரி அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஜூன் 10 முதல் முகாம்கள்

நாகர்கோவில். ஜூன். 7 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையை பதிவு செய்யும் முகாம்கள் குமரி மாவட்டத்தில் நடக்கிறது. அதற்கான தேதிகள் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சாயீன் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.   ஆண்டு வருமானம் ரூ.1,20, 000-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.  இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம்.  இத்திட்டத்திற்கான அடையாள அட்டை தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.  இதனால் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதனடிப்படையில் கிராமங்கள் தோறும் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றது .  தொடர்ச்சியாக ஜூன் 10 ஆம் தேதி  அன்று குறும்பனை மீனவர் சங்கத்திலும்  11 ஆம் தேதியன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்திலும்,  12 அன்று  அன்று புத்தளம் பேரூராட்சி அலுவலகத்திலும், 13 அன்று  அன்று கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்திலும்,  16  அன்று  தோவாளை பஞ்சாயத்து அலுவலகத்திலும், 17 அன்று  இடைக்கோடு பேரூராட்சி அலுவலகத்திலும், 18 அன்று கடையல்  பேரூராட்சி அலுவலகத்திலும், 19 அன்று களியாக்கவிளை பேரூராட்சி அலுவலகத்திலும்  20 அன்று குழித்துறை நகராட்சி  அலுவலகத்திலும், 23 அன்று மஞ்சாலுமூடு அரசு  தொடக்கப்பள்ளியிலும், 24 அன்று நாகர்கோவில் பழைய  மாநகராட்சி அலுவலகத்திலும்,  26 ஆம் தேதியன்று வடிவீஸ்வரம்  மாநகராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.    முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் வருமான சான்றிதழ்,  ரேசன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல்  உள்ளிட்டவைகளை கொண்டு வர வேண்டும்.  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லாத  தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகிலேயே நடைபெறும் முகாமில் கலந்து கொணடு, தங்கள் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட  ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார்.