இளம் தளிர்களுக்கு
இடம் தருகிறது
முதிர் சருகுகள்!!
மரத்தின் வழியே
காதல் வலியை..
இதயம் பேசுகிறது!
நீர் கண்ணாடியில்
முகம் பார்க்கும்
சூரியன்!
கூடடைய விரையும்
பறவைக் கூட்டம்..
மழையின் ஓசையில்!
மறையும் சூரியனை
தாங்கி நிற்கிறது
தூரத்து செடி!
மலை முகட்டை
சிறை பிடிக்கும்
சிலந்தி வலை!
நீர் இன்றி
வறண்டு பிளந்தது
நிலத்தின் தோல்!
தூரத்து மாடி சன்னல்
இருளின் கதை சொல்லும்
ஒன்றை வெளிச்சம்!
சாலையோர மரங்கள்
மஞ்சள் ஆடையில்
இரவின் வெளிச்சம்!
பறவைகளின்
பசி தீர்க்கிறது
நெற்கதிர்!
கோப்பையின் நடுவே
தனித்தீவாக
தேனீரின் மிச்சம்!
குடிசை வீட்டின்
ஓட்டை வழியே
ஒய்யாரமான கட்டிடம்!
காலம் கடந்தும்
காதல் பேசும்
நரையோடிய அன்பு!
இதமான தென்றல்
அசையும் புல்
ஊஞ்சலாடும் தும்பி!
விரல் வழியே விண்ணில்
ஓவியம் தீட்டும்.
பறக்கும் பட்டம்!
மூன்றுகால் சைக்கிள்
மகனிற்கு கால் சுடாமல்..
தாய் சுமக்கிறாள் சுள்ளி!!
-கவிதா பிருத்வி
தஞ்சை