tamilnadu

img

தொழிலாளர்களின் வெற்றியை பறிக்காதீர் தாய்லாந்தில் போர்க்கொடி

பாங்காக், ஜூலை 14- தாய்லாந்தின் ஜவுளித்துறைத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற வெற்றியைத் தட்டிப் பறிக்கும் வேலையில் அந்நாட்டு அரசாங்கம் இறங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தாய்லாந்தில் உள்ள ஹாங்காங் ஜவுளி நிறுவனமொன்று தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையிலிருந்து நீக்கியும் இருந்தது. நீக்கப்பட்டவர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் தீவிரத்தைக் கண்ட தாய்லாந்து அரசு, நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியத்தை வழங்குமாறு ஆணையிட்டது.  தாய்லாந்து தொழிற்சங்க வரலாற்றில் இது மிகவும் அபூர்வமான வெற்றியாகக் கருதப்பட்டது. இதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளில் தொழிலாளர்களுக்குப் பின்னடைவே ஏற்பட்டிருந்தது. தரப்படாத சம்பளத்தைக் கொடுக்குமாறு இதுவரையில் எந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதில்லை.

இந்த வெற்றி கிடைத்தபோதிலும், அதை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்க முனைவார்கள் என்று தொழிற்சங்கங்கள் எதிர்பார்த்தே இருந்தன. தாய்லாந்தின் ஜவுளித்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான ஜம்பதோங் இந்தக் கருத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். தற்போது அவரது அந்தக் கருத்து உண்மைதான் என்பதற்கான சான்றுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. போராட்டங்களின்போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வழக்குகளை தற்போது காவல்துறையினர் பதியத் தொடங்கியிருக்கிறார்கள். போராட்டங்களின்போது உடன்நின்ற மாணவர் தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. பெருந்திரள் போராட்டங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது என்பதைத் தாங்கள் மறுக்கவில்லை என்றும், ஆனால் வழக்குகள் சங்கத் தலைவர்களைக் குறிபார்த்து தொடுக்கப்படுகின்றன என்று ஜம்பதோங் குற்றம் சாட்டுகிறார். ஹாங்காங் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் தாய்லாந்தில் மட்டுமல்ல, தெற்காசிய நாடுகள் அனைத்திலுமே தொழிற்சங்க இயக்கங்களுக்கு உத்வேகமாக அமைந்திருக்கிறது. இதனால்தான் தலைவர்களைக் குறிவைத்து காவல்துறை இயங்குகிறது. 2014 ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு, மாற்றுக்கருத்துகள் ஒடுக்கப்பட்டன. அதையும் மீறி, தொழிலாளர்கள் ஒன்றாக நின்று பெற்ற வெற்றியைப் பறிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.