பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 11- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ், இயங்கி வரும் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு சென்னை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வலெட்சுமி முன்னிலை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த 650 விவசாயிகள் 182 மெ.டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தை சார்ந்த வணிகர்கள், கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உட்பட பிற மாவட்டத்தைச் சார்ந்த வணிகர்கள், ஏலத்தில் கலந்து கொண்டு, பருத்திக்கு அதிக பட்சம் ரூ.7601, குறைந்தபட்சம் ரூ.6679, சராசரி ரூ.7139 என விலை நிர்ணயித்தனர். விற்பனை மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும்.