தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தனது 19வது வயதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு கட்சியின் இடைக்குழு செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டிருக்கிறார். அவருடைய திடீர் மரணம் மாநிலம் முழுவதும் கட்சி அணிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது. அவருடைய மறைவு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் எம்.என்.எஸ். அவர்கள் பன்முகப் பணிகளை மேற்கொண்டவர். இயக்கம், அமைப்பு, தத்துவம், பண்பாடு போன்ற பல தளங்களில் முத்திரையைப் பதித்தவர், முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
கட்சியின் அருப்புக்கோட்டை வட்டச் செயலாளராக செயல்பட்ட காலம் அவருக்கு புரட்சிகரமான இயக்கத்தின் பயிற்சிப் பள்ளியாக அமைந்தது. தொழிலாளர்களை, விவசாயிகளை, நடுத்தர மக்களை மொத்தத்தில் உழைப்பாளி மக்களை திரட்டுவதில் எத்தகைய உத்தியை கடைபிடிப்பது, தோழர்களை அரவணைப்பது, பாதுகாப்பது, அடக்குமுறைகளை எப்படி எதிர்கொள்வது, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எப்படி உறுதியாக நின்று போராடுவது போன்றவற்றை கள அனுபவத்தில் பயிற்சி பெற்றார். அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மில் தொழிலாளர்களையும், தனியார் பேருந்து நிறுவன தொழிலாளர்களையும் திரட்டி சங்கம் அமைத்திட முயற்சிகளை மேற்கொண்டார். நிர்வாகம் அடக்குமுறையை ஏவிவிட்டது. சங்கத்தில் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அடியாட்கள் தொழிலாளர்களைத் தாக்கினார்கள். தொழிலாளர்களை திரட்டிட முயற்சி எடுத்த எம்.என்.எஸ். அவர்களையே தாக்கவும் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது. இவைகளையெல்லாம் தனி ஒரு மனிதனாக அல்லாமல் பல அமைப்புகளையும், அமைப்புகளைச் சார்ந்த உழைக்கும் மக்களையும் ஒன்றுதிரட்டி எதிர்கொண்டு நிர்வாகத்தின் அடக்குமுறைகளை முறியடித்ததில் எம்.என்.எஸ். அவர்களின் பங்கு முக்கியமானது. ஆளும் வர்க்க ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்பதை தனது இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
உழைக்கும் வர்க்கத்தினர் எந்த பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாக்கப்படுகிற போது, தாக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நின்றது மட்டுமல்ல, நிற்க வேண்டுமென்பதையும் சக தோழர்களுக்கு உணர்த்தும்படி செயல்பட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் ராமச்சந்திரன் என்பவர் நூலகராக செயல்பட்டு வந்தார். 1998ம் ஆண்டு அந்த கல்லூரி நிர்வாகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்காமலேயே வாங்கியதாக பொய் ரசீது கொடுக்க அவரை நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறது. மறுத்ததற்காக அவரை ஆள் வைத்து கத்தியால் தாக்கியதோடு நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. இத்தகைய அடக்குமுறையை எதிர்த்து மதுரை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) போராடுகிற போது அவர்களுக்கு ஆதரவாக இதர நடுத்தர வர்க்க அமைப்புகளையெல்லாம் திரட்டி நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்கை ரத்து செய்ய வைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முன்னணியில் நிற்கும் என்பதை மாவட்டம் முழுவதும் உள்ள கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக் கூடிய மக்களுக்கு உணர்த்தினார். அருப்புக்கோட்டை வட்டச் செயலாளராக இருந்த போது விவசாயிகள் பிரச்சனைகளை கையிலெடுத்து இயக்கங்கள் நடத்தி பல கிராமங்களில் விவசாயிகள் சங்க கிளைகள் அமைக்கப்பட்டதோடு அந்த கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கொடியையும் பறக்கச் செய்தவர் தோழர் எம்.என்.எஸ்.
தோழர் எம்.என்.எஸ். அவர்களோடு பழகிய, கட்சிப் பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த தோழர்களை எம்.என்.எஸ். -சுடைய பங்களிப்பை பற்றி கேட்டால் பேச்சை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் பதிவு செய்திட ஏடு இடம் தராது. 2001 முதல் 2003 வரையில் தோழர் பி.எஸ்.போஸ் பாண்டியன் அவர்கள் பாண்டியன் கிராம வங்கியின் கிளை மேலாளராக அருப்புக்கோட்டையில் செயல்பட்டிருக்கிறார். அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலய பணி போன்று பல பணிகளைச் செய்யக் கூடியவர். இவர் தோழர் எம்.என்.எஸ். அவர்களுடைய நெகிழ்வான பங்களிப்பை பற்றி சொன்னச் சம்பவங்களில் ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ‘துளிகள் பெண்கள் மேம்பாட்டு சங்கம்’ அறிவியல் இயக்கம் சார்ந்த ஒரு பெண்ணை அறிவியல் இயக்கத்தினுடைய கிளைச் செயலாளர் போஸ் பாண்டியனிடம் அழைத்து வந்திருக்கிறார். தான் சாதி மறுப்பு திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், பெற்றோர்களும், உறவினர்களும் மறுப்பதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். தோழர் எம்.என்.எஸ்.சை போஸ்பாண்டியன் அணுகி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறார். மணவிழாவிற்கு ஏற்பாடு ஆகிவிட்டது. மணமகளின் பெற்றோர் பெண்ணை வீட்டில் அடைத்து பூட்டி வைத்து விட்டார்கள். மாப்பிள்ளை தயாராக இருக்கிறார். மணப்பெண் வரவில்லை. அடைக்கப்பட்ட வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக பெண் வெளியேறி மணமுடிக்க தயாரானார். பெண்ணின் பெற்றோர் தகராறு செய்ய முற்பட்டனர். தோழர் எம்.என்.எஸ். அவர்கள் அப்போது காவல்துறை உதவி கண்காணிப்பாளராக இருந்த டி. கிருஷ்ணமூர்த்தியைச் (மறைந்த தோழர் டி. இலட்சுமணன் அவர்களின் இளைய சகோதரர்) சந்தித்து பிரச்சனையை கச்சிதமாக முடித்தார். தோழர் எம்.என்.எஸ்.சின் அகால மரணத்தை கேள்விப்பட்டு தனக்கு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தி தந்த தலைவர் இறந்து விட்டாரே என்று அந்த பெண் கண்ணீர் வடித்ததை போஸ்பாண்டியன் என்னிடத்தில் கூறினார். இவ்வாறு பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
தோழர் எம்.என்.எஸ். அவர்களுடைய கட்சி வாழ்க்கையில் அவரை ஊக்குவித்ததில் தோழர் எஸ்.ஏ.பி. அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு தோழர் எஸ்.ஏ.பி. சென்றிருந்த போது இளைஞர் எம்.என்.எஸ்.சை கையோடு விருதுநகருக்கு அழைத்து வந்துவிட்டார். அன்றிலிருந்தே தோழர் எம்.என்.எஸ். அவர்களின் கட்சிப் பணி துவங்கியது. அவர் முழுநேர ஊழியராக பொறுப்பேற்று மாவட்ட மையத்திலிருந்து செயல்பட்டார். விவசாயிகள் சங்கத்தினுடைய மாவட்டச் செயலாளராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டார். கட்சியின் மாவட்ட தலைவர்களில் ஒருவராக பரிணமித்தார்.
வளர்ந்து வரும் கட்சிக்கு மாவட்ட தலைநகரத்தில், மாவட்டக்குழு அலுவலகத்தை உருவாக்குவதற்கு முடிவெடுத்து கட்டுமானப் பணி நடைபெறுகிற போது தோழர் எஸ்.ஏ. பெருமாள் மாவட்டச் செயலாளர். மாவட்டக்குழு அலுவலக கட்டுமானப் பொறுப்பாளராக தோழர் எம்.என்.எஸ். பங்காற்றியிருக்கிறார். தோழர் எஸ்.ஏ.பி. அவர்கள் ஒன்றுபட்ட முகவை மாவட்டச் செயலாளராக இருந்தவர். பிறகு மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் எஸ்.ஏ.பி. விடுவிக்கப்பட்டு தீக்கதிர் பொது மேலாளராக பொறுப்பேற்ற போது தோழர் எம்.என்.எஸ். விருதுநகர் மாவட்டச் செயலாளராக தேர்வானார். சிறந்த அரசியல் தீர்மானத்தை கட்சி நிறைவேற்றினாலும் அதனுடைய அமலாக்கம் என்பது கட்சி ஸ்தாபன செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளது என சோவியத் யூனியனின் தலைவராக விளங்கிய, பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதனடிப்படையில் தான் தோழர் எம்.என்.எஸ். அவர்கள் அமைப்புச் சார்ந்த பணிகளில் அதிகமாக கவனம் செலுத்தினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழுக்கள், கட்சி கிளைகள் ஆகிய அமைப்புகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்திட முயற்சி செய்தார்.
அன்றாட கட்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை சில பிரமுகர்களிடமிருந்து பெறுவது போதுமானதல்ல; எந்த மக்களின் நலனுக்காக கட்சி போராடுகிறதோ அம்மக்களையே சந்தித்து நிதி திரட்டக் கூடிய வெகுஜன நிதி வசூல் என்பதை அமலாக்கி பிற மாவட்டங்களுக்கும் அத்தகைய வழியை பின்பற்றக் கூடிய முன்மாதிரியை உருவாக்கியவர். கட்சியில் பல அரங்கங்களில் பணியாற்றும் தோழர்களை கண்ணும், கருத்துமாக கவனித்து அவர்களை முழுநேர ஊழியர்களாக வருவதற்கு ஊக்குவிப்பதில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தோழர் எம்.என்.எஸ். குறிப்பாக, இளைய தலைமுறையினரை இயங்க வைப்பதிலும், வளர்ப்பதிலும் அவருடைய பங்களிப்பு முக்கியமானது. பல அரங்கங்களில் மாநில அளவில் செயல்படும் பல தோழர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் எஸ்.ஏ.பி.க்கு பிறகு இத்தகைய தோழர்களை பயிற்றுவிப்பதில், உருவாக்குவதில் தோழர் எம்.என்.எஸ்.சுக்கு முக்கிய பங்குண்டு. தத்துவமும், நடைமுறையும் கம்யூனிச இயக்கத்தில் முக்கியமான அம்சங்கள். நடைமுறைப் பணிகளில் ஈடுபடுவதோடு தத்துவார்த்த தளத்திலும் தோழர் எம்.என்.எஸ். தடம் பதித்தவர். அவருடைய தோளில் தொங்கிய ஜோல்னா பையில் எப்போதும் சில புத்தகங்கள் இருக்கும். அதில் அடிப்படை மார்க்சிய, செவ்விலக்கியங்களோடு, புதிதாக வெளியாகும் சாதி, மதம் மற்றும் பண்பாடு பற்றிய நூல்களும் இருக்கும். தோழர் எம்.என்.எஸ். ஒரு பரந்த வாசிப்பாளர். மாநிலம் முழுவதும் கட்சி அணிகளுக்கு கட்சிக் கல்வியை கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் அமைப்பிற்கு வழிகாட்டியாக பல ஆண்டு காலம் இயங்கியவர் தோழர் எம்.என்.எஸ்.
தோழர் எம்.என்.எஸ். அவர்களோடு கட்சியின் மாநிலக்குழுவிலும், மாநில செயற்குழுவிலும் பல ஆண்டு காலம் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பை பெற்றவர்களில் நானும் ஒருவன். அரசியல், தத்துவம், அமைப்பு, பண்பாடு போன்ற பிரச்சனைகள் மீது விவாதம் நடைபெறுகிற போது நளினமாகவும், உறுதியாகவும் மற்றவர்கள் ஏற்கும் வண்ணம் தனது கருத்தை முன்வைப்பார். அவர் தன்னுணர்வுபட்டு நான் பார்த்ததில்லை. தன்னடக்கம் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் தோழர் எம்.என்.எஸ். அதிர்ந்து பேச மாட்டார். ஆனால் அழுத்தமாக வலியுறுத்துவார். சில ஆண்டு காலம் தீக்கதிர் ஆசிரியர் குழுவிற்கு பொறுப்பாளராக செயல்பட்ட தோழர் எம்.என்.எஸ். அவர்கள் கடந்த ஓராண்டாக தீக்கதிர் இதழின் முதன்மைப் பொது மேலாளராக பொறுப்பேற்று செயல்பட்டார். தீக்கதிர் நிர்வாக மேம்பாடு குறித்து சில வல்லுனர்களோடு நடத்திய விவாதத்தில் நானும், தோழர் எம்.என்.எஸ்., மதுக்கூர் ராமலிங்கமும் பங்கேற்றோம். விவாதத்தில் கிடைத்த ஆலோசனையை நுணுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை உருவாக்கி கொண்டிருந்தார். நான்கு பதிப்புகளுக்கும் நேரடியாக சென்று பல நாட்கள் அந்த பதிப்பில் பணியாற்றும் தோழர்களோடு விவாதித்து நிர்வாகத்தை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். எந்த இதழை மேம்படுத்த அவர் அரும்பாடுபட்டு வந்தாரோ அந்த இதழ் - மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் மே முதல் நாளன்று தோழர்கள் சூழ செங்கொடியை ஏற்றினார். சோர்வாக இருக்கிறீர்களே, மருத்துவரை சந்திக்கலாமா என்று அங்குள்ள மேலாளர் பாண்டியராஜன் ஆலோசனை சொல்லும் போது, அல்ல, நான் தேனிக்குச் செல்ல வேண்டும், மே தின பொதுக்கூட்டத்தில் பேச வேண்டும் என்று கூறி விட்டார். அன்றிரவு தான் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய, உறைய வைத்த அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. இறுதி மூச்சுவரை இயக்கப்பணி. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் பிறந்த கிராமத்திற்குச் சென்றவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டோம்.
மறைந்த தோழர் எம்.என்.எஸ். அவர்களுடைய உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்துவது சம்பிரதாயமாக அல்ல. அத்தகைய நிகழ்ச்சிகளில் எம்.என்.எஸ். தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த லட்சியத்தை நிறைவேற்றிட உறுதியேற்பதும், நடைமுறைப்படுத்துவதும் தான் அவருக்கு நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும். எம்.என்.எஸ். இறந்தாலும் அவருடைய கட்சி வாழ்க்கை நமக்குப் பாடமாக திகழும்.