tamilnadu

ஒமைக்ரானை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை,ஜன.4- தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.4) காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள்  பங்கேற்றனர். உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி  தீவிரமாக்கப் பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணி களை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1800 ஆக உயர்ந்து விட்டது. மேலும் 121 பேருக்கு ஒமைக்ரான் பரவி விட்டது.

ஒமைக்ரான் பாதிப்பு  எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில்,  மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்து வதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு களை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, அபராதம் விதிப்பது, கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்து வது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டது. மேலும், 10 ஆம் தேதி வரை 50 விழுக்காடு கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேப்போல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கை கள் ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல், ரேண்டம் முறையில் கூடுதல் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாகவும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முகக் கவசம் வழங்கிய முதல்வர் சென்னை கோட்டையில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அண்ணா சாலையில் சென்றபோது காரை சாலையோரமாக நிறுத்தச்சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களுக்கு முகக் கவசங்களை  வழங்கினார். ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்களுக்கு முகக் கவசம் வழங்கிய மு.க.ஸ்டாலின் ஒவ்வொருவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய  வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் ரிச் தெருவுக்கு எதிரே நடந்து வந்த பொதுமக்களிடம் முக கவசம் வழங்கினார். அப்போது  சிலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து  அவர்களிடம் முகக் கவசம் வழங்கி தவறாது முகக்  கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.