tamilnadu

img

சோழர் கால கல்வெட்டுகள் லால்குடி அருகே கண்டுபிடிப்பு

திருச்சி, ஆக.31- திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயி லில் சோழர் காலத்தை சேர்ந்த இரண்டு  புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள் ளன. இங்கு கள ஆய்வு மேற்கொண்டவர் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் நளினி மற்றும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியர் அகிலா ஆகியோர் ஆவர்.  இந்த கள ஆய்விற்கு கோயில் செயல் அலுவலர் ஜெயா, அலுவலர் ஆசை தம்பி ஆகியோர் உதவி செய்துள்ளனர்.  இந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்த டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் இரா.கலைக் கோவன், திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்தின் சிறப்புக்குரிய சோழர் கோயில் என்றும் ராமாயண காட்சி களை தொடர் சிற்பங்களாக பெற்றுள்ள மிக சில தமிழ்நாட்டு கோயில்களில் இதுவும் ஒன்று என்றும் கூறியுள்ளார். 1930இல் இந்திய தொல்லியல் துறை இக்கோயிலில் இருந்து 12 சோழர் கால கல்வெட்டுகளையும், ஒரு நாயக்க அரசர் கல்வெட்டையும் படி எடுத்து அவற்றின் சுருக்கங்களை பதிப்பித்துள்ளனர். 1993இல் இங்கு ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கூடுதலாக ஐந்து கல்வெட்டுகளை கண்டறிந்து அவற்றின் செய்திகளை பதிப்பித்துள்ளனர்.

முதல் கல்வெட்டு

 இப்போது மேற்கொண்ட ஆய்வில் மேலும் இரண்டு சோழர் கால கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. முதல் கல்வெட்டு சாமவேதீஸ்வரர் கோயில் வெளிச்சுற்றிலுள்ள உலகநாயகி அம்மன் திருமுன் அருகில் உள்ள தரைப்பகுதியில் கண்டறியப்பட்ட சோழர்கால கல்வெட்டு துண்டு கல்வெட்டு ஆகும். மன்னர் பெயரை இழந்துள்ள போதும். அவரது 33ஆம் ஆட்சியாண்டை பதிவு செய்துள்ளதால் கல்வெட்டுக்குரிய மன்னர் மூன்றாம் ராஜராஜசோழர் என யூகிக்க முடிகிறது. இங்குள்ள இவரது 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும் புதிய கல் வெட்டும் ஒன்றும் போல் உள்ளது. மன்னர் பெயரை இக்கோயில் இறைவனுக்குரிய படையல்களுடன் வழிபாடு நிகழ்ந்த திருமங்கலத்து வடக்கிலிருந்து நிலத் துண்டு ஒன்றை ஒருவர் கோயிலுக்கு வழங்கி உள்ளார். இந்த கல்வெட்டு துண்டாடப்பட்டிருப்பதால் நிலம் வழங்கியவரது பெயரை அறிய முடியவில்லை.ஆனால் கொடையாக அளிக்கப்பட்ட நிலத்தை உரிய தொகை பெற்றுக் கொண்டு வரி நீக்கம் செய்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாம் கல்வெட்டு

இரண்டாம் கல்வெட்டு கோயிலின் உட்புறத்தில் உள்ள திரு சுற்றும் மாளிகையின் மேற்கு பகுதி உத்தரத்தில் வெட்டப்பட்டுள்ளது. மன்னன் பெயரோ ஆட்சியாண்டோ இல்லாத போதும் கல்வெட்டின் எழுத்து அமைதி கொண்டு அதை பொதுக்காலம் 14ஆம் நூற்றாண்டுக்குரியதாக கொள்ளலாம். திருவிடைமருதூரில் வாழ்ந்த தாழைக்குடியைச் சேர்ந்த வணிகர் ஆண்டபிள்ளையார் என்பவர் இங்குள்ள சுப்பிரமணியர் திருமுன்பை பழுது பார்த்து புதுப்பித்து கட்டியதாக கூறும் இக்கல்வெட்டு கோயில் இறைவன் பெயரை திருமலு உடைய நாயனார் என்று கூறுகிறது. இவ்வளாகத்தில் உள்ள முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகளில் பரசுராமேஸ்வரர் என்று அழைக்கப்படும் இக்கோயில் இறைவன், பொதுக் காலம் 12 ஆம் நூற்றாண்டு முதல் திருமலுடை நாயனாராக அறியப்பட்டமை இங்குள்ள இரண்டாம் ராஜாதிராஜர், மூன்றாம் ராஜராஜர் ஆகியோரின் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெயர் மாற்றம், 18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்ததை இங்குள்ள காலத்தால் பிற்பட்ட கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இந்நிலையில் இறைவனுக்கு இன்று வழங்கப்படும் சாமவேதீஸ்வரர் என்ற திருப்பெயர் எக்காலத்தில் வழக்கிற்கு வந்தது என்பதை அறிய இயலவில்லை என கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் கூறியுள்ளார்.