சின்னமுட்டம் மீனவர்கள் பருவமழை காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை
நாகர்கோவில். அக். 21- கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் காற்றழுத்த தாழ்வு காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நங்கூரமிட்டு கடல் கரையில் நிறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் இம்மாதம் 25ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
