திருப்பூர், டிச. 18- உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருப்பூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க 12ஆவதுமாநாட்டின் நிறைவு நாளான ஞாயிறன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும், வழக்கறிஞர் சேம நல நிதியை ரூ. 15 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும், அனைத்து நீதிமன்றங்களி லும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து வழக்காடிகளுக்கு நீதி கிடைத்திட தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக நீதிபதிகள் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும்.
கழிப்பறை வசதி அவசியம்
அனைத்து நீதிமன்றங்களிலும் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெண் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கான கழிப்பறை வசதி, பாலூட்டும் அறை போன்ற அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும், இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் வழக்கு நடத்த வருவதற்கு வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை ஆணித்தரமாக எதிர்க்கிறோம்.
மீண்டும் தகுதித் தேர்வா?
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் ஐந்தாயிரம் ஆக உயர்த்தி அதை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பெறுவதற்கு மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்த வழக்கறிஞர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத கட்டாயப்படுத்தும் விதமாக உள்ள பிரிவினை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரியை தொடங்க வேண்டும். ஆவண எழுத்தர்களாக வழக்கறிஞர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை பிரதிநிதிகள் விவாதத்தை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன் தொகுப்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வி.சுரேந்திரநாத் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார்.
மாநில நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.ஜி.ஆர். பிரசாத், செயல் தலைவராக ஏ. கோதண்டம், பொதுச் செயலாளராக எஸ்.சிவகுமார், பொருளாளராக எஸ் மாசேதுங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆர்.ராமமூர்த்தி, கே.இளங்கோ, ஜி.சம்கிராஜ், கே.சுப்புராம், டி. நாகேந்திரன், எஸ்.டி.முபாரக் அலி, வ. ராஜமாணிக்கம், என்.முத்து அமுதநாதன் ஆகிய எட்டு பேர் துணை தலைவர்களாகவும், வெ. ஜீவகுமார், ஏ.மண வாளன் எஸ்.ஷாஜி செல்லான், கே.பாண்டீஸ்வரி, வி. அனந்த சேகர், ஏ.சங்கரன், வி.மதி, வி. ரங்கராஜன் ஆகிய எட்டு பேர் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக வரவேற்பு குழு செயலாளர் வழக்கறிஞர் பி. மோகன் நன்றி கூறினார்.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார் மனைவி அரங்கநாயகி பிரசவத்திற்காக வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாய், சேய் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவர்கள் இல்லாமல் ஒரு செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.