திருப்பூரில் பனியன் தொழில் தொடங்கி 60 ஆண்டு கடந்து விட்டது. சில 100 தொழிலாளர்கள் இந்திய மெஷின்களில் உற்பத்தி நடந்தது. 1960 முதல் 1990 வரை சம்பள உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளுக்காக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. 1984ஆம் ஆண்டு பஞ்சப்படி கேட்டு 127 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. சிஐடியு முன் முயற்சியால் அந்த அனைத்து சங்கப் போராட்டம் வெற்றியடைந்தது. தினசரி பஞ்சப்படி ரூ.1.75 பைசா, தற்போது மாறும் பஞ்சப்படி நாள் ஒன்றுக்கு ரூ.190 பெற்று வருகிறார்கள். இக்காலத்தில் தொழிலாளர் எண்ணிக்கை 20 ஆயிரம் பேர். லோக்கல் பனியன் உற்பத்தி இந்தியா முழுவதும் சந்தைப்படுத்திய நிலையில் 1990க்கு பின்பு வெளிநாட்டு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி துவங்கியது. ரூ.50 கோடிக்கு ஏற்றுமதி நடந்தது. தென் மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் திருப்பூர் வந்தார்கள். தையல் மெஷின்கள். பேப்ரிகேஷன், டையிங், ஸ்டீம், பிரிண்டிங் போன்ற மெஷின்கள் பல லட்சம் முதல் ரூ.2.3 கோடிவரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கம்பெனியின் கட்டிடங்கள், கட்டமைப்பு வசதிகள் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றன.
திருப்பூர் என்றால் உலகம் முழுவதும் அறியப்பட்டது. ஆயத்த ஆடை உற்பத்தியில் இந்தியாவின் கவனம் முழுக்க வந்தது திருப்பூர். வெளி மாவட்டத் தொழிலாளர்களின் உழைப்பு தினசரி 12 மணி நேரம். ஞாயிற்றுக்கிழமை வேலை. இரவு, பகல் பாராமல் பெண்கள் உள்பட பணிபுரிந்து பனியன் ஏற்றுமதி படிப்படியாக அதிகமானது. லோக்கல் உற்பத்தி ரூ.10 ஆயிரம் கோடி. தற்போது சில வருடமாக வெளி மாநிலத் தொழிலாளர்களும் வேலை தேடி வந்துள்ளார்கள். இந்த வளர்ச்சிக்கு உற்பத்தியாளர்களின் முயற்சி இருந்தாலும், தொழிலாளர்களின் மிக கடுமையான உழைப்புதான் முழுமுதல் பிரதான காரணம் என்று முதலாளிகள் சிலர் வெளிப்படையாக பேசுவதுண்டு. ஆயத்த ஆடை, பனியன் தொழில், தொழில் தகராறு சட்டப்படி, அணிதிரட்டப்பட்ட தொழில். இது தவிர வெளிநாட்டு ஆயத்த ஆடை உடன்பாட்டில் கோடு ஆப் காண்டக்ட் தொழிலாளர் நலன் காக்கும் விதிமுறைகள் அமலாக்க வேண்டும் என்று உள்ளது. மேற்கண்ட வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர் நிலை 2021இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி தினசரி சம்பளம் டி.ஏ உடன் சேர்த்து ரூ.451. பெரும்பாலான கம்பெனிகளில் இது அமலாவதில்லை இஎஸ்ஐ., பி.எப்,. ஓவர்டைம் வேலை செய்தால் இரட்டிப்புச் சம்பளம், முழுமையாக தற்போதுவரை அமலாவதில்லை. இவை பற்றி தொழிற்சங்கங்கள் அவ்வப்போது அரசு தொழிலாளர் துறையில் புகார் செய்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை.
சமீபகாலமாக லோக்கல், எக்ஸ்போர்ட் நிறுவனங்களில் பீஸ்ரேட் முறை அதிகமாகி தொழிலாளர்களுக்கு சட்டச் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. ஏற்றுமதி நிறுவனங்களில் 500-1000-2000 பேர் பணி புரிந்தும் சட்டத்திற்குப் புறம்பான காண்ட்ராக்ட் முறையால் சமூக பாதுகாப்பு மறுக்கப்பட்டு தினக்கூலி தன்மையில் தொழிலாளர்களை மாற்றி உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 8 மணி வேலை நேரத்தை 10 மணி நேரமாக சட்டத் திருத்தம் செய்ய ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்தனர். அதை தொழிற்சங்க இயக்கம் முற்றாக முறியடித்தது. பனியன் தொழிலுக்கு சட்டச் சலுகைகள் பொருந்தக் கூடாது. தொழிலாளர் சட்டத்தில் விதி விலக்கு வேண்டும் எனக் கேட்டு தொழிலாளர் விரோத அறிவிப்பை வெளியிட்டார்கள். இதை தொழிற்சங்கங்கள் கண்டன இயக்கம் நடத்தி நிராகரித்தார்கள். ஒன்றிய அரசின் 100 நாள் கிராமப்புற வேலைத் திட்டத்தில் பனியன் தொழிலை இணைக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். உரிமைகளை பறித்து தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் இந்த ஆபத்தான அறிவிப்பை ஒன்றிய அரசு ஏற்கக் கூடாது என்று பெரும் போராட்டம் நடத்தியதால் ஏற்றுமதியாளர்கள் பின் வாங்கினார்கள். ஒன்றிய அரசும் இதை கிடப்பில் போட்டது. 2021இல் ஒப்பந்தச் சம்பளம் நாள்ஒன்று ரூ.451; மாதம் 26 நாள் ரூ.11700 கிடைக்கும். வீட்டு வாடகை, கல்விச் செலவு, உணவுச் செலவு, மருத்துவம், பயணச் செலவு ஆகியவற்றை கூட்டினால் சுமார் 18,000 குறைந்த பட்ச தேவையாகும். எனவேதான் இரவு நேர வேலை, ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்தாலும் போதிய வருமானம் இல்லை. பீஸ்ரேட் பிரிவுக்கு மாறி அதிக உழைப்பை செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். பல ஆயிரம் கோடி ஏற்றுமதி மூலம் ஒன்றிய அரசுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் உள்ளதுடன், தற்போது உள்ள உரிமைகளை பறிக்கிற தொழிலாளர் சட்டங்களை திருத்தி முதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.
இதற்கு எதிராகவும், பணமயமாக்கல் திட்டத்தை திரும்பப் பெறவும் விலைவாசி உயர்வை குறைக்கவும், பெட்ரோல், டீசல், சமையல், கேஸ் விலை உயர்வை குறைக்கவும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கை முன்வைத்து மத்திய சங்கங்கள் மார்ச் 28,29ல் 2 நாள் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. இதனை பனியன் தொழிலாளர்கள் முழு வெற்றி பெறச் செய்யவேண்டும் என மாநில சிஐடியு வேண்டுகோள் விடுக்கிறது. ஆயத்த ஆடை வளர்ச்சியில் ரூ.50 ஆயிரம் கோடி உற்பத்தியில் கடுமையான உழைப்பை செலுத்தி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எந்த பயன்களும் பங்கும் கிடைப்பதில்லை. மாறாக உற்பத்தியாளர்கள் பெருத்த லாபம் ஈட்டி தொழிலாளர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள். வெளிமாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1.5 லட்சம் பேர் பனியன் தொழிலில் உள்ளனர். ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் எதுவும் அமலாவதில்லை ஒப்பந்தச் சம்பளம் கூட கிடைப்பதில்லை. ஏற்றுமதி வளாகத்தில் போதிய வசதியின்றி தங்கவைத்து சமூக பாதுகாப்பு இல்லாமல் சுரண்டப்பட்டு வருகிறார்கள்.
பெண் தொழிலாளர்களுக்கு தனியாக தங்கும் விடுதிகள் இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் உள்ளது. திருப்பூரில் நவீன இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப் போராடி அனுமதி பெற்றோம். அதற்கு உரிய நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக பணிகள் துவங்கப்படாமல் உள்ளது என தொழிலாளர்களின் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தும் நிலை தொடர்கிறது. தொழிற்சங்க இயக்கங்கள் இவை பற்றி போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முறையில் தலையிடாமல் உள்ளன. இது தொழிலாளர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் இரவு பகலாய் வியர்வை சிந்தி வேலை செய்து வருமானம் போதாமல் வாழ முடியாமல் வட்டிக்குக் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். சட்ட உரிமைகள் இருந்தும் முழுமையாகக் கிடைக்காமல் நிரந்தரத் தன்மையுள்ள, வருடம் முழுவதும் வேலை கிடைக்கிற ஏற்றுமதி தொழிலில் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளனர். அதிகமான எதிர்பார்ப்புகளுடன் தொழிலாளர்கள் திருப்பூர் வந்து விடிய, விடிய வேலை செய்தும் உரிய வருவாய் கிடைக்காமல் விடியல் எப்போதுவரும் என்ற ஏக்கமும் கோபமும் போராட்டமாக வெடிக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள், தேவைகள் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும். இது ஆருடம் அல்ல சமூக விஞ்ஞான விதி என்பதை உரக்கச் சொல்லுவோம்.