tamilnadu

மாணவி தற்கொலை விவகாரத்தில் களங்கம் ஏற்படுத்த முயற்சி: திருமாவளவன்

சென்னை,ஜன.29- “அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளைபரப்பி வருகி றார்கள். அரசுக்குஎதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமையன்று(ஜன.29) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சனாதன சக்திகள் கொட்டமடிக்கிற இந்த சூழலில், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, ஒரு கூட்ட மைப்பை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் முன்னெடுத்திருக்கும் முயற்சியை  அனைத்து ஜனநாயக சக்திகளும் வரவேற்க வேண்டும்” என்றார். அரியலூர் மாணவி தற்கொலை பிரச்சினையில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம் என்றும் தெரிவித்தார். பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கூட அந்தச்சட்டம் நடைமுறையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, தமிழகத்திலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் திருமாவளவன் கூறினார்.