குஷ்பூ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தில்லியின் தெற்குப் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவில் சேர்க்கப்பட்டு இருப்பவள். தேசத்தின் தலைநகரில் பிற இடங்களிலும் தனியார் பள்ளிகளுக்கு இப்படி யான வகைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய விதிமுறை இருக்கிறது. சில பள்ளிகள் உள்ளார்ந்த முறையில் இத்தகைய மாணவர்களை முன்னேறவைக்க எல்லோரோடும் சமமாக உணரவைத்துக் கற்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. பல பள்ளிகள் கடனே என்று கணக்கு எழுதிக் கொள்வதோடு சரி. குஷ்பூ, நல்லவேளையாக முதல் வகையில் வரும் பள்ளியின் மாணவி.
பள்ளி மாணவர்களுக்கான ஆலோசகர் என்ற வகையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு இடை யறாத தொடர்பில் இருப்பவன் நான். அண்மையில், குஷ்பூ படித்துவரும் பள்ளியில் 12ம் வகுப்பு மாண வர்களுக்காக, ‘பெரிய சித்திரம்’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சி முகாம் நடத்தினேன். கொடுந்தொற்று நோய் குறித்த அச்சம், எதிர்வரும் பள்ளியிறுதித் தேர்வுகள் குறித்த பதட்டம் போன்றவை காரணமாக பொதுவாக 12ம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் உளவியல் பாதிப்பில் இருப்பதை உணர முடிந்தது. (பிரதமர் மோடியின் ‘தேர்வை எதிர்கொள்வது எப்படி’ என்ற மந்திர வித்தை யால் மாணவர்கள் யாரும் பெரிதும் நம்பிக்கை பெற்றதாகத் தெரியவில்லை). அதிலும் குறிப்பாக, 2022ல் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் தங்களது உயர்நிலைப் பள்ளிக் காலத்தைத் தாங்கள் முற்றாகப் பறிகொடுத்த ஏமாற்றத் தில் இருக்கின்றனர். ஒரு மாணவர் விரக்தியாகக் குறிப்பிட்டார்: “ஊரடங்கு, நாங்கள் உயர்நிலை வகுப்பில் நுழைந்தபோது தொடங்கி, நாங்கள் வெளி யேறும் போது அதுவும் முடிந்தது”
கோவிட் 19 காலத்தில் இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்களில் சொந்தங்களை இழந்திருப்பவர்கள், மிகவும் துயரமான சூழலைச் சந்திக்க நேர்ந்தவர்கள். பலருக்கு இப்போ தும் உளவியல் அதிர்ச்சியும், பயமும் பீதியும் வந்து தாக்குவதுண்டு. அவர்களுக்கு ஓர் உளவியல் அமைதி யை ஒருங்கமைத்துத் தரவும், ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்பட வைக்கவும் ஒரு பயிற்சி வைத்தேன். இளவயதில் இருந்து இப்போதைய நேரம் வரை அவர்கள் நினைவில் நீடிக்கும் முக்கிய நினைவுகள், சிந்தனைகள், உணர்வுகளைப் பெரிய பெரிய வெள்ளைத் தாள்களில் பதிவு செய்து வழங்கு மாறு குஷ்பூவையும், அவளது வகுப்புத் தோழர்களை யும் கேட்டுக் கொண்டேன். தாங்கள் நிரப்பிய காகிதங்களை மாணவர்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இது ஒரு சிகிச்சை முறையும் உள்ளடக்கியது. தங்களது வாழ்க்கையின் பெரிய சித்திரத்தில் எல்லாமே கண்ணீரால், கஷ்டங் களால், பேரழிவுகளால் மட்டுமே நிரம்பி இருக்க வில்லை, வாழ்க்கை கஷ்டமானது தான், ஆனால், அதிலும் மகிழ்ச்சியான தருணங்களும் கொஞ்சம் கட்டிக் கலந்திருக்கிறது என்பதை அவர்கள் கண்டு ணரும் வாய்ப்பு அது. தன்னுடைய பதிவில், ‘பாரபட்சம்’ என்ற சொல்லை குஷ்பூ குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். அவள் அதை விவரித்துச் சொல்ல முடியுமா என்று வியந்தேன், ஆனால், அவள் விவரித்தாள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2016ம் ஆண்டில், அவளுக்கு 11 வயது இருந்த சமயம், தனது டியூஷன் பயிற்சி மையத்தில் 15, 16 வயது நிரம்பிய பையன் ஒருவன், எப்போது கடந்து செல்லும்போதும் மிக மோசமான சொற்களால் அவளை இழிவு படுத்திக் கொண்டே இருந்ததை, குஷ்பூ தனது குழுவில் சக மாணவியருக்கு எடுத்துச் சொன்னாள். அவள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவள் என்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பது தான் காரணம். அவளை ஒரு முறை தேசத் துரோகி என்று விளித்தான். ‘பாகிஸ்தானுக்குப் போய்த் தொலை யேன்’ என்றான். அவனை எந்த விதத்திலாவது சமா தானப்படுத்தி, அன்பு செலுத்தி அவன் அப்படி யெல்லாம் பேசுவதைத் தவிர்க்க குஷ்பூ எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவன் அதே ரீதியில் வசவுமாரி பொழிந்து கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில், அவள் டியூஷன் வகுப்புகளுக்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். கடந்த ஆறு ஆண்டு களாக ஆறாத மனநிலையில் இன்னும் தவிக்கிறாள் அவள். “எந்த நியாயமும் அற்ற அந்த வெறுப்புணர்வுத் தாக்குதலை என்னால் இது நாள் வரை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லி குஷ்பூ உடைந்து கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள்.
சுற்றி இருந்த மாணவியர் ஒரு கணம் உறைந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர், செய்வதறியாது திகைத்தனர். பின்னர், ஒருவர் பின் ஒருவராக அவளருகே சென்றமர்ந்து அவளை அணைத்துக் கொள்ளவும் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவுமாக நெருக்கமாயினர். அவர்களில் ஒருத்தி குஷ்பூவின் முதுகை அன்போடு தடவிக் கொடுத்தாள். இன்னொருத்தி எழுந்துபோய் ஒரு குவளையில் நீர் கொண்டு வந்து குடிக்க வைத்தாள். இதயத்தை நொறுக்கிப் போட்ட தருணமாயிருந்தது அது, அதே நேரத்தில் நம்பிக்கை ஊட்டிய தருண மாகவும்! வகுப்புத் தோழி ஒருத்தி, “நீ எந்த மதம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. நீ எங்கள் தோழி!” என்று சொன்னாள்.
கண்ணீர் சிந்தியபடியே குஷ்பூ கேட்டாள்: “அவன் ஏன் என்னை வெறுத்தான்? நான் அவனுக்கு என்ன கொடுமை இழைத்துவிட்டேன்?”
வகுப்புத் தோழி ஒருத்தி சொன்னாள்:”அவன் இதயத்தில் இருக்கும் வெறுப்புணர்ச்சிக்கு நீ என்ன செய்வாய், அது உன் பிழை அன்று!” அப்போது அங்கே இருந்த அவளது வகுப்பு ஆசிரியை சொன்னார்:” எல்லோரும் உன்னைப் போல் அத்தனை அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில்லை, குஷ்பூ! நிறைய பேர், அடுத்தவர் சொல்லும் பொய்களை அப்படியே நம்பி விடுகின்றனர். அந்தப் பையனும் தனக்குச் சொல்லப்பட்ட பொய்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பியிருக்கிறான்”.
இந்துக் குடும்பத்து மாணவர்கள் தங்களது இஸ்லாமிய வகுப்புத் தோழிக்கு ஆதரவு காட்டிச் சூழ்ந்து கொண்டிருந்ததை நான் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். குஷ்பூவை இந்தப் பாடு படுத்தி எடுத்த அந்தப் பையனைப் பற்றியும் சிந்தித்தேன். 2016 எனில், மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்வு என்பதால், வலதுசாரி இந்துத்துவா வெறியுணர்வு - இஸ்லாமிய வெறுப்பு எனும் நச்சுப் பரவலின் தொடக்க நேரத்திலேயே அந்தப் பையன் அத்தகைய உணர்வுக்கு உள்ளானவனாக இருப்பான். திரும்பிப் பார்க்கையில், நிலைமை ஓரளவு இணக்கமான சூழல் அற்றுப் போகாத நாட்கள் அவை. அப்போதே அப்படி இருந்தவன், இன்றைய சூழலில், ஓர் இளைஞ னாக இன்னும் எந்த அளவுக்கு உருமாறி இருப்பான் என்று நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. எதிர்கால இந்திய சமூகத்தைக் குறித்த நம்பிக்கை கள் ஏதேனும் இருக்குமானால், குஷ்பூ மற்றும் அவளது வகுப்புத் தோழர்களான இளம் தளிர்கள், அவர்களது வகுப்பு ஆசிரியை போன்றோரிடம் தான் அது துளிர்க் கிறது. இப்படிப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டுமே என்று வேண்டித்தவிக்கிறது மனம்.
அதே நேரத்தில், இந்தியக் குடிமக்களுக்கு, குறிப்பாக, பெரும்பான்மை இந்துக்களுக்கு ஒரு பெரும் பொறுப்பு உண்டு, தலை தூக்கி வரும் வெறுப்பு அர சியலுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக குஷ்பூவின் வகுப்புத் தோழர்களும் வகுப்பு ஆசிரியையும் அணுகி யது போல அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.
கட்டுரையாளர் : கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர்.
நன்றி : தி வயர் (17.04.2022)
- தமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்