tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் ஜதீன்தாஸ் பிறந்தநாள்

தோழர் ஜதீன்தாஸ் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் நாள் பிறந்தார். இந்தியச்சுதந்திரப்போராட்டத்தில் தோழர் பகத்சிங்குடன் இணைந்து பணியாற்றினார். 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம்பகத்சிங்,  சதி வழக்கில் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் விடுதலைப் போராளிகள் கிரிமினல் கைதிகள் போலத் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

இதனைக் கண்டு கொதித்த தோழர் பகத்சிங் எதிர்த்துப் போராட முடிவுசெய்தார். பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகஅகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தினர். உண்ணாவிரதம் தோழர்களுக்குப் புதிது.ஆனால் அதே சிறையில் இருந்த கட்சியின் மூத்த தோழர் ஜதீன்தாஸ் மட்டுமேஉண்ணாவிரதம் இருந்து அனுபவம் பெற்றவர். எனவே அவரிடத்தில்தோழர்கள் ஆலோசனை செய்தனர். தோழர் ஜதீன்தாஸ் தெளிவுபடக் கூறினார்.தோழர்களே… அகிம்சைப் போராட்டம் ஆயுதப்போராட்டத்தை விட மிகக்கடினமானது.

போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவது எளிது. உயிர் உடனே போய்விடும். உண்ணாவிரதம் என்பது அப்படியல்ல. அணுஅணுவாக சாவை எதிர்கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டத்தில் பின்வாங்குவது என்பதே கிடையாது. கோரிக்கைகள் தீரும்வரை சமரசம் என்பதே கிடையாது. ஆயுதபலத்தை விட ஆயிரமாயிரம் மடங்கு ஆன்மபலம் வேண்டும் என்று தன் தோழர்களுக்கு ஜதீன்தாஸ் அறிவுறுத்தினார். தோழரின் அறிவுரையை பகத்சிங் நெஞ்சில் நிறுத்தினார். ஜூன் 15ம்தேதி உண்ணாவிரதம் ஆரம்பமானது. ஜூலை 10ம்தேதி லாகூர் சதிவழக்கு விசாரணை ஆரம்பமானது. விசாரணையின்போதும் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்தார் தோழர் பகத்சிங். பலவழிகளிலும் உண்ணாவிரதத்தை முறியடிக்க தோழர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட தோழர் ஜதீன்தாஸ் மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற செயலால் நுரையீரலில் உணவு செலுத்தப்பட்டு செப்டம்பர் 13 அன்று உயிர் துறந்தார். ஜதீன்தாஸின் மரணம் உண்ணாவிரதத்தை மேலும் உரமேற்றியது. முடிவாக 1929 அக்டோபர் 4ந்தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. பகத்சிங், சுகதேவ் மற்றும் பி.கே.சின்ஹா ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றார்கள்.