நாமக்கல் அருகே நடந்த சாலைவிபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனி பகுதியில் வசித்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சதீஸ்குமார், தர்மன், பப்லு, ரோஷன் குமார், சசிகுமார், ரஜேந்திரன் ஆகிய 6 பேரும் ஒரு சுமோ காரில் திருச்சி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சின்னவேப்பநத்தம் பகுதியில் கார் வந்தபோது, சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத் தொழிலாளர்கள் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.