தேனி:
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்களன்று தண்ணீரை திறந்துவைத்தார்.தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடவேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடியும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து திங்களன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்கள், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்கள், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து வரும் திங்கட்கிழமை 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை, முதல் 51 நாள்களுக்கு விநாடிக்கு 30 கன அடி, அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி, கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதம் என மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன் மூலம் பெரியகுளம் தென்கரை வட்டத்திலுள்ள தென்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம் பகுதிகள் பாசன வசதி பெறும்.
இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். தண்ணீர் திறப்பு நிகழ்வில் தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், வருவாய் கோட்டாட்சியர் சிநேகா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.