tamilnadu

img

பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களை குப்பைகளை அள்ள வைத்த தனியார் பள்ளி

திண்டுக்கல்லில் பள்ளி திறந்த முதல் நாளே தனியார் பள்ளி ஒன்று மாணவர்களை குப்பைகளை அகற்ற வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் குழந்தைகள் காலை 8 மணிக்கே உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் பூக்கள், இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் உற்சாகமாக மாணவர்களை வரவேற்றனர். 
அதேபோல திண்டுக்கல் மேட்டுபட்டியில் உள்ள  பிலோமினாள் நடுநிலைப்பள்ளிக்கு மாணவ மாணவியர்கள் வருகை தந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த குழந்தைகளை பள்ளியை சுத்தம் செய்ய பயன்படுத்தி கொண்டது. மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை பள்ளிக்கு வெளியே உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதற்கு அனுப்பியது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் குப்பைகளை சுமந்து வந்து குப்பை தொட்டிகளில் கொட்டினர். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்வது முதல் அனைத்து வேலைகளும் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளே பிலோமினாள் பள்ளியில் மாணவர்களை குப்பை சுமக்க வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நேரடியாக சென்று கேட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி கண்டிப்பதாகவும் உறுதியளித்தார்