தருமபுரி, ஜூன் 1-தருமபுரி அருகே அரசு உண்டு, உறைவிட சிறப்பு பள்ளிக்கூடம் ஒன்றில் கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் வித்தியாசமான ஓவியங்கள் வரைந்து மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி மாணவர்கள், பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு பள்ளிக்கூடம் சென்று இடையில் நின்ற கிராமப்புற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் கல்வி கற்று தரப்படுகிறது. 50 குழந்தைகள் படித்து வரும் இந்த பள்ளிக்கூடத்தின் சுவர் முழுவதும் தற்போது ரயில் பெட்டிகளை போன்றவித்தியாசமான புதிய ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கோடை விடுமுறையில் பள்ளி மைதானத்திற்கு விளையாட வரும் மாணவகள் இந்த ரயில் பெட்டி பள்ளிக்கூடத்தை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.இதேபோல், ஏன் படிக்க வேண்டும். மற்றும் கல்வியின் அவசியம் என்ன, கல்வியைப் பயில ஏழ்மை ஒரு தடையல்ல போன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்களும் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளது. கல்வி பயின்று இடை நின்ற கிராமப்புற குழந்தைகள் பள்ளிக்கூடம் என்ற பயமின்றி மகிழ்ச்சியாக, இயற்கையான சுற்றுச் சூழலோடு மீண்டும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்திலும், தனியார் பள்ளிகளில் தான் இப்படி இருக்கும் என்றில்லாமல், அரசு பள்ளிகளும் இதுபோன்ற செய்ய முடியும் என தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.