சேலத்தில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை அலுவலக உதவியாளர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். அங்கு அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை நீதிபதியின் அறைக்குள் நுழைந்த அலுவலக உதவியாளரான பிரகாஷ் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியினை எடுத்து நீதிபதியை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி கூச்சலிட்டதால் நீதிமன்றத்தில் இருந்த ஊழியர்கள் அவரை காப்பாற்றினர். மேலும் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்த போலீஸார் நீதிபதி பொன்.பாண்டியனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட அலுவலக உதவியாளரான பிரகாஷை சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாசின் பணியிட மாறுதலால் அலுவலக உதவியாளர் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கு காரணம் நீதிபதி பொன்பாண்டியன் தான் காரணம் என்று அவரை தாக்க முயன்றதாக முதற்கட்ட விசாரைணையில் தகவல் வெளியாகியுள்ளது.