சென்னை:
நெல்லை உடையார்பட்டி கல்லறைத் தோட்டத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. மாநிலபொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கல்லறைத் தோட்டத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டி கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான, 40 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த பயன்பாட்டில் இருக்கிற கிறிஸ்தவ மக்களின் அடக்கஸ்தலமான கல்லறைத் தோட்டத்தை சில விஷமிகள் அடித்துநொறுக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர். இந்த அநாகரீக, காட்டுமிராண்டித் தனமான செயலை தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் அமைதியாக, ஒற்றுமையாக, சமாதானமாக வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் சில விஷமிகள் மக்கள் மத்தியில் மத ரீதியான மோதல்களை,சாதிய ரீதியான மோதல்களை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான், மறைந்த தங்களுடைய மூதாதையர்களை அடக்கம் செய்து, பராமரித்து, வணங்கி வரக்கூடிய கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தை வெறியர்கள் சிலர் சேதப்படுத்திஇருக்கிறார்கள். தீயநோக்கம் கொண்ட இந்த வெறிக் கும்பலை உடனடியாக கைது செய்து, அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், இந்த கல்லறை தோட்டத்தை அதன் சொந்தக்காரர் களான தேவாலய நிர்வாகமே பராமரிப்பதற்கு உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான தீய சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை உடனே விடுதலை செய்க!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நில உரிமைக்காக, சுரங்க முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எதிராக, ஆதிவாசி மக்களின் கல்வி, சுகாதாரம், குடியிருப்பு மேம்பாட்டுக்காக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இயேசு சபையின் அதிபர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களை, அவர் நேரில் சென்று பங்கேற்காத பீமா கோரேகான் தலித் மக்கள் போராட்டத்தை காரணம்காட்டி மத்திய அரசாங்கத்தின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ ஏ) கைது செய்திருப்பதை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 83 வயதான, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வயது முதிர்ந்த அருட்தந்தை அவர்களை இவ்வாறு கைது செய்திருப்பது நியாயமற்றது. எனவே அவரை அந்த பொய் வழக்கிலிருந்து விடுவித்து, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வழக்குகளை வாபஸ் பெறுக!
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, இன்றைக்கு விசாரணைக்கு கட்டாயப்படுத்தி அழைக்கப்படக்கூடிய செயலை கைவிட வேண்டுமெனவும், அவ்வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழக அரசையும்,காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு உடனே அனுமதி வழங்குக!
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் ஏற்படுத்தியிருக்கக் கூடிய குழப்பங்களை யாவரும் அறிவோம். இந்த நீட் தேர்வு அரசு பள்ளியில் படிக்கிற சாதாரண ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தடை செய்துள்ளது. எனவே தமிழக அரசு இயற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக் கொள்கிறது.