tamilnadu

அகவிலைப்படி நிலுவை கோரி மே-28-ல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 6 -அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மே - 28 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஓய்வூதியர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தர வேண்டிய அகவிலைப் படியை தமிழக அரசு வழங்காமல் உள்ளது. பொதுவாக மூன்று மாத நிலுவையோடு ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படியை வழங்குவது வழக்கம். மே மாதம் தொடங்கியும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீதும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே, அகவிலைப்படி நிலுவையை வழங்க வலியுறுத்தி மே 28 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;