tamilnadu

img

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக கூட்டாளி தேவநாதன் கைது !

சென்னை,ஆக.13 நிதி நிறுவன மோசடி வழக்கில்  பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் சென்னையில் செவ்வாயன்று (ஆக.13) கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமை யான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இந்த நிதி  நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும்  மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்  தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர் கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவில் வட்டி அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.520 கோடியை திரும்ப கொடுக்க மறுப் பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கை யாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும், 150-க்கும் மேற்பட் டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தின மும் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப் பூரில் உள்ள நிதி நிறுவன அலுவல கத்தில் அவ்வப்போது திரண்டு முறை யிட்டு வந்தனர். இந்நிலையில், பாதிக் கப்பட்டவர்கள் சென்னை அசோக்  நகரில் உள்ள தமிழக காவல் துறை யின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து, அப்பிரிவு போலீ ஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக  நிறுவனத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவ கங்கை தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக, ஒரே நேரத்தில் அதிக மான வாடிக்கையாளர்கள் திரண்டு  தங்களின் பணத்தைக் கேட்டு வந்த தால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்ததாக அந்த நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவநாதன் சூறையாடிய பணத்தை மீட்டுத்தர சிபிஎம் வலியுறுத்தல்

பாஜக வேட்பாளராக சிவகங்கையில் போட்டியிட்ட டி.தேவநாதன் யாதவ் சூறை யாடிய பணத்தை மீட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர்ஆர்.வேல்முருகன்  விடுத்துள்ள அறிக்கையில் சுமார் 520 கோடிரூபாயை தேவ நாதன் கையாடல் செய்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு  வட்டியும், முதிர்வு தொகையையும் தராமல் கடந்த ஓராண்டாக இழுத்தடித்து வந்தார் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து முதலீட்டாளர்கள் பல கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக  நடத்தி வந்தனர். தற்போது தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதலீட்டார்கள் அனைவருக்கும் முழுத்தொகையும் கிடைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.