tamilnadu

img

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தொடும்

சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (மே) தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர் விலை உயர்வு காரணமாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தொடுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த மாதம் 22ஆம் தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 4ஆம் தேதி சவரனுக்கு ரூ.168ம், கடந்த புதன்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.152 உயர்ந்து காணப்பட்டது. வியாழக் கிழமையும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. கடந்த 10 நாட்களில் ஒரு பவுன் ரூ.680 வரை உயர்ந்துள்ளது.

புதன்கிழமை  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 116க்கும், ஒரு சவரன் ரூ.24 ஆயிரத்து 928க்கும்  விற்பனை செய்யப்பட்டது. வியாழக் கிழமை  மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 6ம், சவரனுக்கு ரூ.48ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 122க்கும், ஒரு சவரன் ரூ.24 ஆயிரத்து 976-க்கும் விற்பனையானது.
ஆனால்   ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 7)   சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.24,896 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 39.90 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. உயரும் பட்சத்தில், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட்டு விடும். இதேபோல், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 129க்கும், ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 32 க்கும் விற்பனை ஆனது. 

அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிக பட்சமாக பிப்ரவரி மாதம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 230க்கும், ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்து 840க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு விலை சற்று குறைந்தது.இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி நிருபர்களிடம் கூறுகையில், சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா மறைமுகமாக பொருளாதார தடை விதித்து கூடுதலாக சுங்கவரி விதித்து வருகிறது. அதேபோல், சீனாவும் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கிறது. இப்படியாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மோதல் நிலவுகிறது. அதன் தாக்கம் காரணமாகவே தங்கம் விலை உயருகிறது என்றார்.

;