tamilnadu

img

காவிரி ஆற்றில் மேகதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு சிபிஐ கண்டனம்

காவிரி ஆற்றில் மேகதாட்டில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாட்டில் புதிய அணையக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கர்நாடகத்திலும், ஒன்றியத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி பொறுப்பில் உள்ள சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 9000 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரை நிலைமை சென்று விட்டதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே தான் மேகதாட்டு தொடர்பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் அறிவிப்பு வெளியிட்டதை அத்துமீறிய நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததை நினைவுபடுத்துகிறோம்.
தமிழக அரசும் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்ததோடு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது, மேகதாட்டு அணை கட்டுவது குறித்து எந்த விவாதமோ, முடிவோ ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதோடு வரும் 26ம் தேதி அறிக்கை அளித்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்தின் பாசன உரிமையை மறுத்து உபரி நீரை மட்டும் பயன்படுத்தும் மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறது. கனமழை காலத்தில் வரும் உபரி நீரையும் தடுக்கும் வகையில் தான் மேகதாட்டில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு துணை போகாமல் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு, காவிரியின் மேகதாட்டுவில் அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.