சென்னை, ஜூன் 8- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று ஹால் டிக்கெட் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில் பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பு களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறையில் பலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை நடத்தக்கூடிய தேர்வு துறை இணை இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் தர்மபுரியில் உள்ள அவரது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுத் தேர்வுக்கு பொறுப்பாளராக உள்ள இவருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதால் தேர்வு பணியை அடுத்து யார் கண்காணிப்பார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.