சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க திட்டம்
சென்னை, ஆக.29 - நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதிவேக பயணம் மற்றும் விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு காரணமாக இந்த ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் பயணி களிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, ஏழு வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயல் இயக்குநர் திலீப் குமார் அளித்துள்ள விவரங்களின்படி, “தற்போது மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய மூன்று வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படும். மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய நான்கு வழித்தடங்களில் எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.