உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற அரங்கிலேயே காலணி வீச முயன்றது பேரதிர்ச்சியை தருகிறது. சனாதன வழக்கறிஞரின் இத்தகைய வன்செயலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் வார்த்தைகளில்,
"இது இந்திய உச்சநீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான சாதி அடிப்படையிலான தாக்குதலாகத் தெரிகிறது." இதை அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒருமித்த செய்திக் குறிப்பின் மூலம் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துவது ஆகும். சனாதன தர்மம் தாக்கப்படுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்று காலணி வீச முயன்ற வழக்கறிஞர் கூச்சலிட்டுள்ளார். சனாதனம் இந்தியச் சமூகத்தின் மீது திணித்துள்ள சாதிய முறைமையை, ஒடுக்குமுறையை பல நூற்றாண்டுகளாக அனுபவிப்பவர்கள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டுமென்பதைத் தவிர வேறென்ன பொருள். அத்தகைய சாதிய வெறியின் உச்சமே தலைமை நீதிபதி மீதான காலணி வீச முயற்சித்த சம்பவம்.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சம்பவத்திற்கு பின்னரும் தனது பணிகளை சற்றும் பொருட்படுத்தாமல் இயல்பாக தொடர்ந்ததன் மூலம் மக்கள் மனங்களில் உயர்ந்து நிற்கிறார். இருப்பினும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது இப்படிப்பட்ட சனாதனிகளுக்கு சரியான பாடமாக அமையும்.
பிரதமர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் தொலைபேசி மூலம் பேசியதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இத்தகைய வன்மங்கள் இவ்வளவு உயரிய இடம் வரை தமது கொடுங்கரங்களை நீட்டுவதன் பின்புலத்தில் உள்ள சித்தாந்தமும், வெறுப்பு அரசியலும் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களால் வளர்த்தெடுக்கப்படுவதே என்பதை சுட்டிக் காட்ட விழைகிறோம். ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டை ஒட்டிய நிகழ்வுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயாருக்கு அழைப்பு விடுவதும், இன்னொரு பக்கம் இத்தகைய அவமானத்தை அவர் மீது கட்டவிழ்த்து விட முனைவதும் சங் பரிவாரின் இரண்டு முகங்களே.
காலணி வீச முயன்ற வழக்கறிஞரை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இடைநீக்கம் செய்து கழற்றி எறிந்திருப்பதும், நாடு முழுக்க சட்டம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
எனினும் நாடு முழுக்க இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சமூக நீதி இயக்கங்கள் தங்களின் கண்டன குரலை வலிமையாக எழுப்புவதும், சங்பரிவாரத்தின் இத்தகைய அராஜகங்களை தடுத்து நிறுத்துவதும், வர்ணாசிரம - சாதிய ரீதியிலான தாக்குதல்களை கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்வதும் காலத்தின் தேவை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.
காலணி வீசி முயன்ற வழக்கறிஞர் மீது சட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு கடும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுக்கிறது.
மேலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழுக்கள் அக்டோபர் 10 ஆம் தேதி கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
